திருமண நிகழ்ச்சியில் கருப்பு சட்டை போட்டு கொண்டு நடிகர் மயில்சாமி செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி செய்துள்ள காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரிகளே இதற்கு காரணமாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் கூட, அதன் முழுமையான பலன் இந்திய வாகன ஓட்டிகளுக்கு கிடைப்பதில்லை.

எனவே தொடர்ந்து அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய வாகன ஓட்டிகள் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செவி சாய்ப்பதாக இல்லை.

தமிழ்நாட்டில் வேண்டுமானால் சமீபத்தில் பெட்ரோலின் விலையை மாநில அரசு 3 ரூபாய் குறைத்தது. இது தமிழ்நாட்டை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு ஓரளவிற்கு நிவாரணத்தை வழங்கியுள்ளது. எனினும் ஒன்றிய அரசும் விலையை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வித்தியாசமான போராட்டங்கள் மூலமும் எரிபொருள் விலையை குறைக்கும்படி வலியுறுத்தப்படுகிறது.

இந்த சூழலில் நடிகர் மயில்சாமி செய்துள்ள சம்பவம் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் மயில்சாமி அரசியலிலும் ஆர்வம் உடையவராக உள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் கூட நடிகர் மயில்சாமி கலந்து கொண்டுள்ளார்.

இந்த சூழலில், சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மயில்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் இதைக்கண்டு திகைத்து போயினர். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகதான் நடிகர் மயில்சாமி, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் மயில்சாமி கூறுகையில், ''பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதை ஒன்றிய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. எனவே மக்களின் கோரிக்கையை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதன் காரணமாகதான் மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்தேன்'' என்றார்.

அதே சமயம் தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பதை வரவேற்பதாகவும் நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார். மணமக்களுக்கு நடிகர் மயில்சாமி பெட்ரோலை பரிசாக வழங்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆனால் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசாக வழங்கப்படுவது இது முதல் முறை கிடையாது.

கடந்த காலங்களில் நிறைய பேர் இந்த வித்தியாசமான முயற்சியை செய்துள்ளனர். அத்துடன் கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம், பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்பது போன்ற சலுகைகளும் கடந்த காலங்களில் நிறைய முறை வழங்கப்பட்டுள்ளன. அந்த சம்பவங்கள் அனைத்து மக்களின் கவனத்தை ஈர்த்தன.

இதேபாணியில் நடிகர் மயில்சாமி தற்போது மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நடிகர் மயில்சாமியின் கோரிக்கைக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பொதுமக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பி வருகிறது. எனவே இந்திய சந்தையில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. இதில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முக்கியமானது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 என்ற பெயரில் நேற்று (ஆகஸ்ட் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்1 ப்ரோ என்ற வேரியண்ட்டிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இதேபோல் சிம்பிள் ஒன் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications