பெங்களூரில் ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி... இந்த கோர விபத்து கற்று தரும் பாடம் என்ன தெரியுமா?
பெங்களூரில் நடைபெற்ற கோர விபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கோரமங்களாவில் இன்று அதிகாலை நடைபெற்ற கார் விபத்து பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில், ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் மகன் கருணாசாகரும் ஒருவர்.

விபத்தில் சிக்கியது ஆடி க்யூ3 கார் ஆகும். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த விலை உயர்ந்த கார்களில் ஒன்று. விபத்து நடைபெற்றபோது காரின் முன் பகுதியில் 3 பேர், பின் பகுதியில் 4 பேர் என ஒட்டுமொத்தமாக 7 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

கார் அதிவேகத்தில் வந்ததை, இந்த விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த அதிவேகம் காரணமாகதான் கார் கட்டுப்பாட்டை இழந்தபோது, ஓட்டுனரால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஆடி க்யூ 3 காரில் ஏர்பேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் விபத்தின்போது ஏர்பேக்குகள் விரிவடையவில்லை என தற்போது வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சீட் பெல்ட் அணியாததுதான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது ஒரு சில கார்களில் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே விபத்தின்போது ஏர்பேக் விரிவடைந்து பயணிகளை காப்பாற்றும்.

ஆனால் பெங்களூரில் இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தின்போது காரில் பயணித்த யாரும் சீட் பெல்ட் அணியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏர்பேக் விரிவடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்னும் ஒரு சில கார்களில், சீட் பெல்ட் அணிந்திருந்தாலும், அணியாவிட்டாலும் கூட ஏர்பேக் விரிவடையும்.

ஆனால் சீட் பெல்ட் அணியாவிட்டால் ஏர்பேக் விரிவடைந்தாலும் பலன் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஏனெனில் சீட் பெல்ட் அணியாவிட்டால், காருக்கு உள்ளேயோ அல்லது வெளியேவோ பயணிகள் தூக்கி வீசப்படலாம். அப்போது ஏர்பேக் விரிவடைந்தாலும் கூட பாதுகாப்பு கிடைக்காது. பயணிகளுக்கு படுகாயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே சீட் பெல்ட் அணிவதுதான் காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும். இதை அனைவரும் உணர வேண்டும். இதற்கிடையே கருணாசாகர் நேற்று இரவு ஓசூரில் இருந்து பெங்களூர் வந்துள்ளார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் இவர்கள் 7 பேரும் சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவு ஹோட்டல் மூடப்படும் வரை அவர்கள் அனைவரும் அங்கேயே இருந்ததாக தெரிகிறது. இதன்பின்னர் 7 பேரும் ஒரே காரில் புறப்பட்டுள்ளனர். அப்போது அதிவேகத்தில் பயணம் செய்த காரணத்தால் கார் விபத்தில் சிக்கியுள்ளது. கார் விபத்தில் சிக்கிய உடனேயே தீப்பிடிக்க தொடங்கியது. இதுவும் காரில் பயணம் செய்தவர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்து விட்டது.

காரில் பயணம் செய்யும்போது அதிவேகத்தில் ஓட்ட கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற பாடங்களை இந்த பெங்களூர் விபத்து நமக்கு உணர்த்தியுள்ளது. அத்துடன் ஒரு சிலர் டிரைவர் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால் காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதுதான் உண்மை.

இனிமேல் காரில் எங்கு பயணம் செய்தாலும், சிறிய தொலைவாக இருந்தாலும் கூட கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய மறக்காதீர்கள். அதேபோல் எக்காரணத்தை கொண்டும் காரில் அதிவேகத்தில் பயணம் செய்ய வேண்டாம். அதிவேகத்தில் பயணம் செய்வதால் சேமிக்கப்படும் ஒரு சில நிமிடங்களை விட உயிர் முக்கியமானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எந்த இடத்திற்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் தேவையற்ற அவசரத்தை தவிர்க்கலாம். இந்த அவசரமே பலரையும் அதிவேகத்தில் காரை ஓட்ட தூண்டுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். நாம் செய்யும் சிறு சிறு தவறுகள், மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதற்கு பெங்களூர் விபத்து ஒரு உதாரணம்.


Click it and Unblock the Notifications








