வண்டியை தூக்கிய போலீஸ் எஸ்ஐ... பழிக்கு பழி வாங்கிய மின் வாரிய ஊழியர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததற்காக, ஒட்டுமொத்த காவல் நிலையத்தையும் மின் வாரிய ஊழியர் பழி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கூமாப்பட்டி. இங்குள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஒருவர், சமீபத்தில் வாகன தணிக்கை நடத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது. மின் வாரியத்தின் பணியாற்றும் சைமன் என்பவர் அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.

அந்த இரு சக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, உதவி ஆய்வாளர் விசாரித்துள்ளார். பின்னர் வாகனம் தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் மின் வாரிய ஊழியர் சைமன் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது.

எனவே இரு சக்கர வாகனத்தை, உதவி ஆய்வாளர் பறிமுதல் செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் நடவடிக்கை தொடர்பாக தனது உயரதிகாரிகளிடம் மின் வாரிய ஊழியர் சைமன் புகார் செய்துள்ளார். இதைக்கேட்ட அவர்கள், கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின்சாரத்தை துண்டிக்கும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதன்பேரில் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு சுமார் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் தரப்பில், காவல் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பேரில் காவல் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். காவல் துறை மற்றும் மின்சார துறை ஊழியர்களுக்கு இடையே நடைபெற்றுள்ள இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது சட்டத்திற்கு புறம்பான விஷயம்தான். விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளை இது அதிகரித்து விடும்.

அதுவும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் தற்போதைய சூழலில், இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தால், ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில், காவல் துறை உதவி ஆய்வாளர் ஏதேனும் அத்துமீறி நடந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் காவல் துறை அதிகாரிகளை பழி வாங்கும் நோக்கில், மின் வாரிய ஊழியர்கள் இப்படி நடந்து கொள்வது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக கடந்த 2019ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. தலை கவசம் அணியாமல் வந்த மின் வாரிய ஊழியருக்கு காவல் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக காவல் நிலையத்திற்கு சுமார் 4 மணி நேரம் மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். ஆனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையம், மின் கட்டணத்தை பாக்கி வைத்திருந்ததாகவும் அப்போது தகவல்கள் வெளிவந்தன. அரசு ஊழியர்களுக்கு இடையே அவ்வப்போது நிகழும் இத்தகைய மோதல்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.


Click it and Unblock the Notifications








