யாரு கண்டா இவ்ளோ சீக்கிரமே இது நடக்கும்னு.. சென்னை வான்வெளியில் சீக்கிரத்துலேயே நிகழவிருக்கும் அதிசயம்!
தமிழகத்தில் வெகு விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் மிக தீவிரமாக மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், இந்த சேவை தொடங்கப்பட இருப்பதை முன்னிட்டு மாநிலத்தில் பயன்பாட்டில் இருக்கும் அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான ஹெலிபேட்கள் (ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளங்கள்)-ஐ மேம்படுத்தும் பணியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Industrial Development Corporation) ஈடுபட்டு வருகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு ஜாக்பாட்டாக ஹெலிகாப்டர் சேவையைத் தொடர்ந்து, பறக்கும் கால் டாக்சி (Flying Taxi) சேவையும் வெகு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையிலேயே பறக்கும் கால்-டாக்சி பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதற்காக, தமிழக அரசும் உலக புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் (Boeing)-ம் இணைந்திருக்கின்றன.

ஆமாங்க, அமெரிக்க விமான நிறுவனமான போயிங்-கே, தமிழக அரசுடன் இணைந்து சென்னையில் ஏர் டாக்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது. சென்னை பெருநகரத்தில் பறக்கும் டாக்சிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் தற்போது தமிழக அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆர்வமே நகரத்தில் விரைவில் பறக்கும் டாக்சி கால் தடம் பதிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே விரைவில் சென்னையின் வான்வெளியில் விமானங்கள் அடிக்கடி பறந்துக் கொண்டிருப்பதைப் போல பறக்கும் டாக்சிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பறக்கும் டாக்சிகளுக்கு ஓடு தளம் தேவையில்லை என கூறப்படுகின்றது. அவை செங்குத்தாகவே டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகியவற்றை செய்யும்.
அதாவது, ஹெலிகாப்டர்களைப் போல செங்குத்தாகவே பறக்க மற்றும் தரையிறங்கச் செய்யும். இத்தகைய பறக்கும் டாக்சிகளையே சென்னைக்காக தயார் செய்ய இருக்கின்றது புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். தொடர்ந்து, தற்போது அடுத்தக்கட்ட பணிகளும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. அதாவது, நகரத்தில் பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான முழு திட்டத்தை வகுக்கும் பணிகளே தொடங்கி இருக்கின்றன.
பறக்கும் டாக்சி தரையிறங்கும் பேட்களை உருவாக்குவது தொடங்கி பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். இதுதவிர, தடையில்லாமல் அவை பறக்க மற்றும் தரையிறங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்துவது மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவது போன்றவை பற்றிய திட்டங்களும் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, தகவல் தொடர்பு, நேவிகேஷன் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள், திறன் மேலாண்மை மற்றும் ஆளில்லா விமான அமைப்பு போக்குவரத்து மேலாண்மைக்கான ஆகியவற்றிற்கான திட்டமிடலே மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாகவே சீக்கிரமே சென்னையில் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய வட்டாரம் கூறியிருப்பதாவது, "விமான டாக்சிகள் முதலில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த சோதனை காலகட்டத்தில் சரக்குகளே ஏற்றிச் செல்லப்பட இருப்பதாக" தெரிவித்திருக்கின்றது. இந்த சோதனைக்கு பின்னரே அது பொது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளது.
போயிங்கின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் குழு, வினாதா ஏரோமொபிலிட்டி (Vinata Aeromobility), இபிளேன் நிறுவனம் (Eplane Company), கிரேட்டர் சென்னை போக்குவரத்துக் காவல்துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் ஏர்-டாக்ஸிக்கான சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி நகர்ப்புற பறக்கும் டாக்சி இயக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "நகரத்தில் மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளது. ஆகையால், ஹைப்பர் மொபிலிட்டிக்கான தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. மெட்ரோ மற்றும் சாலை தீர்வுகளின் வரம்பை எட்டிய பின்னர், நம்முடைய அடுத்தக்கட்ட தேவையாக பறக்கும் டாக்சியே இருக்கும்" என அவர் கருத்து தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐஐடி-மெட்ராஸில் உள்ள இபிளேன் நிறுவனமும், தமிழகத்தில் பறக்கும் டாக்சி சேவையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பொருட்டு சிறிய மின்சார பறக்கும் டாக்ஸியை உருவாக்கியுள்ளது. இது ஒரு முழு சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பறக்கும் என கூறப்படுகின்றது. இதுவும் வெகு விரைவில் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








