வெளியானது அதிரடி உத்தரவு... மாணவர்களை இனி டூவீலர்களில் பள்ளிக்கு அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?
மாணவர்கள் டூவீலர்களில் பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்று பெரும்பாலானோரின் வீடுகளில் இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. பள்ளிகளுக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு கூட இரு சக்கர வாகனங்களை பெற்றோர்கள் வாங்கி தருவது அதிகரித்து வருகிறது. எனவே உரிய வயதை எட்டி, லைசென்ஸ் எடுப்பதற்கு முன்பாகவே, பள்ளி மாணவர்கள் பலர் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர்.

குறிப்பாக பள்ளிகளுக்கு கூட மாணவர்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதில் பலர் ஹெல்மெட் அணிவதும் இல்லை. ஆனால் இனி மாணவர்கள், இரு சக்கர வாகனங்களை ஓட்டி கொண்டு பள்ளிக்கு வர முடியாது. தமிழக பள்ளி கல்வி துறையின் அதிரடியான ஒரு உத்தரவுதான் இதற்கு காரணம். மாணவர்கள் இனிமேல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு பள்ளிக்கு பள்ளி கல்வி துறை தடை விதித்துள்ளது.

இதற்கு அனுமதி கிடையாது என பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி, மாணவர்கள் யாராவது இரு சக்கர வாகனத்தில் பள்ளிகளுக்கு வந்தால், அவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் பள்ளி கல்வி துறை தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்கு காரணம்.

பள்ளி மாணவர்கள் பலர் லைசென்ஸ் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். இதன் காரணமாக சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் பயணம் செய்யும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவேதான் லைசென்ஸ் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்போது இந்த அதிரடியான உத்தரவை பள்ளி கல்வி துறை பிறப்பித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதை தவிர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது. அப்போது வரும் பேருந்துகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக ஏறுகின்றனர். எனவே பேருந்துகளின் உள்ளே இடம் போதாமல், மாணவர்கள் பலர் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில், பள்ளி முடிவடைந்த பின்னர் மாணவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் வெளியே அனுப்ப கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாணவர்களை தனித்தனி குழுக்களாக வெளியே அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 நிமிட இடைவெளியில், மாணவர்களை தனித்தனி குழுக்களாக வெளியே அனுப்புவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில வழித்தடங்களில் பேருந்துகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதும் கூட, பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வதற்கு காரணமாக இருக்கிறது.

இத்தகைய வழித்தடங்களில் அதிகளவு பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டால், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே இந்தியாவில் சிறார்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கார் போன்ற பெரிய வாகனங்களை கூட சிறார்கள் இயக்குகின்றனர். விபத்துக்கள் நேரிடலாம் என்பதை கருத்தில் கொள்ளாமல், பெற்றோர்கள் இதனை பெருமையாக கருதுவது வருத்தமான விஷயம்.

சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீதும் கூட பலமுறை பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னமும் பெற்றோர்கள் பலர் இந்த தவறை செய்து கொண்டே உள்ளனர். சிறார்களை வாகனங்களை ஓட்டுவதற்கு ஊக்குவிக்கும் பெற்றோர்கள் மீதும் இனி வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகள் பாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








