மதுரையில் அரசு பஸ் டிரைவருக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய அதிகாரிகள்... எதற்காக தெரியுமா?
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் பிறப்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை மீறி முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மதுரையில் முக கவசம் அணியாத அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவருக்கு சுகாதார துறை அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் முக கவசம் அணியாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அவருக்கு 200 ரூபாயை அபராதமாக விதித்தனர். இதுகுறித்து நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முக கவசம் அணியாதவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். எனவே வெளியிடங்களுக்கு செல்வோர் தவறாமல் முக கவசங்களை அணிந்து செல்வது சிறந்தது.

இது கொரோனா வைரஸிடம் இருந்து மட்டுமின்றி, அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்தும் உங்களை காக்கும். முன்னதாக தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

எனவேதான் அனைவரையும் முக கவசம் அணிய வைக்க இப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக காரில் தனியாக பயணம் செய்பவர்களும் முக கவசம் அணிய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக உத்தரவிட்டிருப்பதும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.

காரில் தனியாக செல்லும்போது முக கவசம் அணியவில்லை என்ற காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்போது, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அத்துடன் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையின்போது எடுத்துரைத்தது.


Click it and Unblock the Notifications








