இதைதான் எதிர்பாத்தோம்... அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க
அரசு பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய அறிவியலின் அதிவேக வளர்ச்சி நமக்கு பல விதங்களில் நன்மையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல, அறிவியலின் அதிவேக வளர்ச்சியால் ஒரு சில தீமைகளும் ஏற்பட்டு வருகின்றன. தற்போது அனைவரின் கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் செல்போன்களை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம்.

செல்போன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தாலும், அதனை குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்த கூடாது. இது சாலை விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். இந்தியாலில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையானது மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

டூவீலர், கார் மற்றும் லாரி என அனைத்து வகையான வாகன ஓட்டிகளிடமும், பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தும் பழக்கம் தற்போது காணப்படுகிறது. இதற்கு பஸ் டிரைவர்களும் விதிவிலக்கு அல்ல. பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருக்கும்போது டிரைவர்கள் செல்போனை பயன்படுத்திய காரணத்தால், கடந்த காலங்களில் ஏராளமான சாலை விபத்துக்கள் அரங்கேறியுள்ளன.

இப்படிப்பட்ட விபரீதங்கள் அரங்கேறிய பின்னரும் கூட, ஒரு சில டிரைவர்கள் அதில் இருந்து இன்னமும் பாடம் கற்று கொள்ளவில்லை. பணியின்போது அவர்கள் தொடர்ந்து செல்போன்களை உபயோகித்து கொண்டேதான் இருக்கின்றனர். இதனால் விபத்து நடைபெற்று விடுமோ? என்ற அச்ச உணர்வுடனே பயணிகள் பஸ்ஸில் பயணிக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசு போக்குவரத்து கழகம் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போனை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது தங்கள் பாக்கெட்டில் செல்போனை வைத்திருக்க கூடாது.

அதற்கு பதிலாக அரசு பஸ் டிரைவர்கள் தங்கள் செல்போனை, கண்டக்டரிடம் ஒப்படைத்து விட வேண்டும். பணி முடிந்த பின்னர் செல்போனை மீண்டும் பெற்று கொள்ளலாம். இந்த உத்தரவை மீறி, அரசு பஸ் டிரைவர்கள் தங்களுடைய பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் மட்டுமின்றி, கண்டக்டர்கள் முன் இருக்கையில் அமர்ந்து, அவர்களுடன் உரையாடி கொண்டு வருவதன் காரணமாகவும் விபத்துக்கள் நடைபெறலாம். அதாவது டிரைவர்களின் கவனம் சிதறி விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்றொரு வகையிலும் இது பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

அதாவது கண்டக்டர்கள் முன் இருக்கையில் அமர்ந்து டிரைவர்களுடன் பேசி கொண்டு வரும்போது, ஒரு சில சமயங்களில் இரண்டு பக்க படிக்கட்டுகளையும் கண்காணிக்க தவறி விடுகின்றனர். பயணிகள் பஸ்ஸில் இருந்து தவறி கீழே விழுவது போன்ற பிரச்னைகள் இதன் மூலமாக ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி கண்டக்டர்கள் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமரக்கூடாது. அதற்கு பதிலாக பின் பகுதியில் கடைசி இருக்கையில்தான் அமர வேண்டும். இதன் மூலமாக 2 பக்க படிக்கட்டுகளையும் கண்காணித்து கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் மூலமாக அரசு பஸ்களால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவுகள் பாதுகாப்பை மேம்படுத்தும் என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த 2 உத்தரவுகளும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இல்லாவிட்டால் மற்ற ஒரு சில அறிவிப்புகளை போன்று இதுவும் வெறும் உத்தரவுடனே நின்று விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஏனெனில் இந்த 2 அதிரடியான உத்தரவுகளும் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானவை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








