இனி வண்டிக்கு ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்க லஞ்சம் குடுக்க வேணாம்! எல்லாம் தானியங்கியா வரப்போகுது!
தமிழக அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதி சான்று வழங்கும் நிலையங்களை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசு இதை முழுமையாக தானியங்கி மூலம் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதன்படி தமிழகத்தில் 18 தானியங்கி தகுதி சான்று மையங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு வரும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் போக்குவரத்து வாகனங்களுக்காக வழங்கப்படும் தகுதி சான்று முழுமையாக தானியங்கி முறையில் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஓர் ஆண்டு காலம் அவகாசம் இருக்கும் நிலையில் தற்போது மாநில அரசுகள் எல்லாம் அதற்கு தயாராகி வருகிறது.

அதேநேரம் மத்திய அரசு இப்படியாக தகுதி சான்றுகளை வழங்க தனியார் பங்களிப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. இதன்படி தற்போது தனியார் பங்களிப்புடன் வாகனங்களுக்கு தகுதி சான்றுகளை வழங்கும் தானியங்கி சோதனை மையங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை ஒன்றையும் தற்போது பிறப்பித்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழகத்தின் தனியார் பங்களிப்பின் மூலம் தானியங்கி சோதனைகள் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கை தான் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது உள்துறை செயலாளர் அமுதா ஒரு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தமிழகத்தில் தற்போது செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், திண்டுக்கல், மதுரை தெற்கு உள்ளிட்ட 18 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி தகுதிச் சான்று மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டெண்டர் விடப்பட்டு தனியார் சோதனை மையங்கள் அமைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த மையங்கள் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் தகுதி கொண்டவையாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் டெண்டர் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த தானியங்கி தகுதி சான்று மையங்கள் எல்லாம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதிக்கு பிறகு செயல்பாட்டிற்கு வரும்.
இந்த தானியங்கி மையங்களை செயல்படுத்த சில வரைமுறைகள் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு தானியங்கி மையங்களிலும் 12 ஊழியர்கள் எப்பொழுதும் பணியில் இருக்க வேண்டும். இந்த மையங்களில் 15 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்கள் வந்து தங்கள் தகுதி சான்றை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
அதற்கு சில சோதனைகள் நடத்தப்படும். இந்த சோதனைகள் எல்லாம் தானியங்கியாக நடக்கும் . இந்த தானியங்கி சோதனைகளில் ஒரு வாகனம் வெற்றி பெறும் மூலம் மட்டுமே அந்த வாகனத்திற்கு தகுதி சான்று நீட்டிக்கப்பட்டு வழங்கப்படும். இல்லையென்றால் தகுதி இல்லாத வாகனம் என சான்று ரத்து செய்யப்படும்.
இந்த நிலையங்களில் தகுதிச் சான்று பெற இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 650, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 850, கனரக வாகனங்களுக்கு ரூபாய் 1250 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோக தகுதி சான்று காலாவதியான வாகனங்கள் இங்கு வருமானால் அந்த வாகனத்திற்கு தகுதி சான்று பெற காலாவதியான பிறகான ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 50 கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக தகுதி சான்று பெற வரும் ஒரு வாகனத்திற்கு அதன் பிரேக் அமைப்பு, ஹெட் லைட், பேட்டரி, டயர், ரிப்லேக்டர் உள்ளிட்ட 40 விதமான சோதனைகள் நடத்தப்படும். இந்த 40 விதமான சோதனைகளிலும் இந்த வாகனங்கள் பாஸ் செய்ய வேண்டும். இதில் ஒரு சோதனையில் சிக்கல் இருந்தால் கூட அந்த வாகனத்திற்கான தகுதிச் சான்று வழங்கப்பட மாட்டாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களுக்கான தகுதி சான்றை தானியங்கி மூலம் மாற்றுவதால் இதில் நடக்கும் ஊழல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். மேலும் தகுதியான வாகனங்கள் மட்டுமே சாலையில் ஓடும். இதனால் வாகனங்களால் ஏற்படும் மாசு வெகுவாக குறையும். இந்திய அரசு மாசு கட்டுப்பாட்டில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதால் இது அந்த முயற்சிக்கு மிகப்பெரிய பலனை தரும்.


Click it and Unblock the Notifications








