கெஜ்ரிவால் பாணியில் அதிரடி... செம மாஸ் காட்டிய ஓபிஎஸ்-இபிஎஸ்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்!!
கெஜ்ரிவால் பாணியில், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியா முழுக்க இன்று அனைவராலும் உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு பெயர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய முக்கிய எதிர்கட்சிகள், கெஜ்ரிவால் என்ற மனிதரை சமாளிக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை நாடே கொண்டாடி கொண்டுள்ளது. இந்த மகத்தான வெற்றிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்திய நலத்திட்டங்களே முதன்மையான காரணமாக சொல்லப்படுகிறது. எனவே இந்தியாவின் மற்ற மாநில அரசுகளும், தற்போது கெஜ்ரிவாலை பின்பற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரெடுக்க முடிவு செய்துள்ளன.

இதில், தமிழக அரசு முந்தி கொண்டுள்ளது. தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு, போக்குவரத்து துறையின் மீது எடப்பாடி பழனிச்சாமி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். முன்பு படுமோசம் என்ற நிலையில் இருந்த தமிழக அரசு பேருந்துகள் தற்போது பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துள்ளன. குறிப்பாக எஸ்இடிசி பேருந்துகளின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

இதுதவிர சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பிஎஸ்-6 பேருந்துகளை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், போக்குவரத்து துறையில் தமிழக அரசு தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்க உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசை பின்பற்றி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை நேற்று (பிப்ரவரி 14) தாக்கல் செய்தார்.

இதில், தமிழக அரசு பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 75.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் தமிழகத்தில் உள்ள 17,500 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் அரசு பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு பேருந்துகளில் பெண்கள் சில சமயங்களில் தர்ம சங்கடங்களுக்கு ஆளாகின்றனர். இந்த திட்டம் மூலம் அந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பேருந்துகள் மட்டுமல்லாது, தனியார் பஸ்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக்கப்படவுள்ளன.

ஆனால் இதற்கு முன்பாக டெல்லியில் இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இயங்கி வரும் சுமார் 90 சதவீத பேருந்துகளில் தற்போது சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. டெல்லியை பொறுத்தவரை, அரசு பஸ்கள் மட்டுமல்லாது, தனியார் பஸ்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மாணவி ஒருவர் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால்தான் டெல்லியில் இயங்கும் பஸ்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்தது. அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது.

தற்போது அந்த திட்டத்தை பின்பற்றிதான், தமிழக அரசு பஸ்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டம் என்பதால், பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் அறிவிப்போடு நின்று விடாமல், அதனை சிறப்பாக செயல்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








