இனி தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளில் இந்த வேகத்திற்கு மேல் செல்ல முடியாது... மீறினால் உடனுக்குடன் அபராதம்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வேக வரம்பை மீறி செல்லும் அதிவேக வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறைகள் விரைவில் கொண்டு வர உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக, அதிவேகம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கேரளத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை மீறிச் செல்லும் வாகனங்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்காக, கேரளத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் மூலமாக அங்கு சாலை விபத்துக்கள் குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, தமிழ்நாட்டிலும் புதிய சாலைப் பாதுகாப்பு திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 70,000 கிமீ தூரத்திற்கான தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசு பராமரித்து வருகிறது. அதேபோல, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, வேக வரம்பை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து உடனுக்குடன் அபராதம் விதிக்கும் நடைமுறையையும் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளத்தை போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏஐ தொழில்நுட்பத்துடன் செயல்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதன்மூலமாக, சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது.

சாலை விதிகளின்படி, 80 அல்லது 90 கிமீ வேகத்தில்தான் வாகனங்கள் அதிகபட்சமாக செல்ல வேண்டும். ஆனால், இங்கு அதனை மீறி அதிவேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. இதனால், சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. டுத்த 6 மாதங்களில் இந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் கேமரா கண்காணிப்பு மூலமாக உடனுக்குடன் அபராதம் விதிக்கும் நடைமுறையால் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதே நடைமுறையை தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளிலும் வர இருப்பது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அரசாணை வெளிவரும்போது அனைத்து விபரங்களும் தெரிய வரும்.
கேமராவில் பதிவாகும் வாகனப் பதிவு எண், விதிமீறல்கள் அடிப்படையில் தானியங்கி முறையிலேயே வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையாக இது செயல்படுத்தப்படும். அதேபோன்று, வாகனங்கள் பழுதடைந்து சாலையில் நிற்கும்போது, அங்கு மீட்பு மற்றும் அவசர சேவை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள முடியும்.
தற்போது இருக்கும் விதிமுறைகளின்படி, மாநில நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 80 கிமீ வேகத்திலும், நான்கு வழித்தடம் கொண்ட நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகம் வரை செல்வதற்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் சாலைகளில் மட்டும் அதிகபட்சமாக 120கிமீ வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டால், தமிழ்நாட்டு சாலைகளில் அதிகபட்ச வேகத்தை தாண்டும்போது உடனடியாக அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால், வாகன ஓட்டிகள் இனி பறப்பதற்கு கடிவாளம் போடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications
