விட்டா காரின் டாப்பில் அமர்ந்து பயணிப்பார்கள் போலிருக்கே!! கேரளாவில் தமிழ்நாட்டு தம்பதியின் ஆபத்தான பயணம்!
மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரில் நம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி கேரளாவில், மலைப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்ப்போரை அதிர்ச்சியுற செய்யும் அந்த வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பயணிகளின் சவுகரியத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் பல்வேறு புது புது வசதிகளை கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வாறு, இன்றைய மாடர்ன் கார்களில் சன்ரூஃப் சாதாரணமான விஷயமாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பணக்காரர்கள் வாங்கும் கார்களில் மட்டுமே வழங்கப்படும் என்ற நிலை போய், மிடில்-கிளாஸ் மக்களால் வாங்கக்கூடிய விலையிலான கார்களில் கூட சன்ரூஃப் வர ஆரம்பித்துவிட்டன.

ஆனால் சன்ரூஃப்-ஐ அனைவரும் முறையாக உபயோகப்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில், கார் பயணத்தின்போது சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்தவாறு பயணம் செய்வது அபராதத்திற்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால், நிறைய பேர் கார் சன்ரூஃப்-ஐ தவறாக பயன்படுத்துவதை இணையத்தில் வீடியோக்களாகவும், படங்களாகவும் பார்த்திருக்கிறோம்.
அந்த வரிசையில், கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஜோடி தங்களது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் பனோராமிக் சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்தவாறும், இதைவிட ஆபத்தானதாக பின் கதவின் மீது அமர்ந்தவாறும் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை செய்தியின் இறுதியில் காணலாம்.

கேரளாவில் தாமரைச்சேரி சுரம் என்ற மலைப்பிரதேச பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. மலைகளின் அழகையும், இயற்கை வளங்களின் அழகையும் ரசித்தவாறு பயணிப்பதற்காக இந்த தமிழ்நாட்டு தம்பதியினர் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், குற்றம் குற்றமே. இயங்கும் காரின் சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பதே தவறு எனும்போது, காரின் கதவில் அமர்ந்தப்படி பயணிப்பது அதனினும் தவறு ஆகும்.
ஏனெனில், எடையை தாங்காமல் கதவு உடைய நேர்ந்தாலோ அல்லது அமர்ந்திருப்பவர் தனது பிடிமானத்தை இழந்தாலோ சொல்ல முடியாத அளவிற்கு சேதங்கள் ஏற்படலாம். கேரளாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில், அந்த ஆண் பயணி ஆரம்பத்தில் ஜன்னல் மீது அமர்ந்துக் கொண்டு, ஜன்னலை பிடித்தவாறு பயணம் செய்துள்ளார். ஆனால் மலைப்பாதை என்பதால், கார் வளைந்து வளைந்து சென்றுள்ளது.

இதனால் அவர், பிடிமானம் கிடைக்காததால் மேற்கூரையில் பொருட்களை கட்டி எடுத்துச் செல்ல வழங்கப்படும் கம்பியை பிடித்துக் கொண்டு பயணித்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இந்த நபர் காரின் வலதுப்பக்க ஜன்னலில் அமர்ந்து பயணித்துள்ளார். அப்படியென்றால், அவர் ஓட்டுனரின் பார்வையை மறைந்தப்படி பயணம் செய்துள்ளார். அதாவது, ஓட்டுனரால் அந்த சமயத்தில் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.
மலைப்பாதைகளில் காரை இயக்கும்போது, காரின் அனைத்து கண்ட்ரோல்களும் ஓட்டுனரிடம் இருத்தல் அவசியம் ஆகும். பயணியின் செயலால், ரியர் வியூ தடைப்படும்போது ஓட்டுனர் அசவுகரியமாக உணர நேரிடும். தாமரைச்சேரி சுரம் பகுதியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது சரியாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் உள்ளது. முழுக்க முழுக்க மலைகளால் நிரம்பிய இந்த பகுதியில் இருந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு சில மணிநேரங்களிலேயே சென்றுவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மலை பிரதேசங்கள் எந்த அளவிற்கு அழகானதோ அதே அளவிற்கு ஆபத்துகளையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கக் கூடியது. ஆதலால், கார்களில் பயணம் செய்யும்போது வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கவனம் தேவை என பலர் எச்சரித்து கொண்டிருக்கும் சூழலில், இந்த தமிழ்நாட்டு தம்பதி செய்திருப்பதை போன்ற செயல்கள் தேவையில்லாத ஒன்று. இவர்களது இந்த செயலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications
