630 கிமீ சைக்கிள் பயணம்... ஊருக்கு வந்ததும் என்ன செஞ்சார் தெரியுமா? மக்களை பிரம்மிக்க வைத்த பெரியவர்
630 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சொந்த ஊருக்கு வந்த பெரியவர் ஒருவர், தமிழக மக்களை பிரம்மிக்க வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), நம்மை எல்லாம் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி போட்டுள்ளது. முன்பு போல் நம்மால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடிவதில்லை. உறவினர், நண்பர்களை பார்க்க வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என விரும்பினால், பஸ், ரயில் போக்குவரத்து கிடையாது.

கார், பைக் போன்ற சொந்த வாகனங்களில் செல்லலாம் என்றால், அதற்கு இ-பாஸ் வாங்க வேண்டும். இ-பாஸ் வாங்குவதோ குதிரை கொம்பாக உள்ளது. ஒட்டுமொத்தத்தில் சிறகை முறித்து, நம்மை எல்லாம் கூண்டு கிளியாக மாற்றி விட்டது கொரோனா வைரஸ். ஆனால் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலிலும் கூட, இன்னமும் பலர், 'ரிஸ்க்' எடுத்து பயணங்களை செய்து கொண்டுதான் உள்ளனர்.

பல நூறு கிலோ மீட்டர்களை கூட அவர்கள் சர்வ சாதாரணமாக சைக்கிள்களில் கடக்கின்றனர். இதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. கூடவே மன வலிமையும் வேண்டும். அப்படி உடல் வலிமையுடன், மன வலிமையும் ஒருங்கே அமையப்பெற்றவரான பாண்டியன் என்ற பெரியவர் சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவை சைக்கிளில் கடந்துள்ளார். அவருக்கு வயது 73!

அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதற்கான காரணமும், வழியில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் உங்கள் மனதிற்கு இதத்தை கொடுக்கலாம். கொரோனா வைரஸ், அரசியல் பிரச்னைகள், சமூக வலை தளங்களில் கருத்து மோதல்கள் போன்ற செய்திகளையே தினம் தினம் படித்து அலுத்து போயிருப்பவர்களுக்கு, நெகிழ்ச்சியை ஏற்படுத்த கூடிய பதிவு இது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தெய்வநாயகப்பேரி என்ற கிராமம்தான் பாண்டியனின் சொந்த ஊர். சென்னை போன்ற மாநகரங்களின் பரபரப்பு கொஞ்சமும் 'செட்' ஆகாத அக்மார்க் கிராமத்து மனிதர். ஆனால் எதிர்பாராத விதமாக வாழ்க்கை அவரை சுமார் நான்கு மாதங்கள் சென்னைக்குள் சிறை வைத்து விட்டது.

பாண்டியனுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில், மூத்த மகன் கத்தாரில் உள்ளார். இளைய மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார். அவரது வீடு தாம்பரத்தில் உள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இளைய மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. எனவே அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்தவர்தான் பாண்டியன்.

கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில், பாண்டியன் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இளைய மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்றதும், கேரளாவில் இருந்து பஸ் பிடித்து நேராக சென்னைக்கு வந்த பாண்டியன், மீண்டும் புறப்பட இருந்த சமயத்தில், ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பழகிய அவருக்கு, நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்கும் வாழ்க்கை கொஞ்சமும் ஒத்து வரவில்லை. எப்படியாவது கிராமத்திற்கு சென்று விட வேண்டும் என்று துடியாய் துடித்து கொண்டிருந்த பாண்டியனுக்கு, கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி திண்டிவனத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு பேருந்து செல்வதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக பேரனின் சைக்கிளை எடுத்து கொண்டு திண்டிவனம் புறப்பட்டு விட்டார் பாண்டியன். ஆனால் தாம்பரத்தில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து, திண்டிவனம் வந்து சேர்ந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அவர் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்த பேருந்தின் மேலே கேரியர் இல்லாததால், சைக்கிளை ஏற்ற முடியாது என கூறி விட்டனர்.

ஆனால் விழுப்புரம் சென்றால், சைக்கிளை ஏற்றி செல்லக்கூடிய பஸ் கிடைக்கும் என பாண்டியனிடம் அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர். எனவே திண்டிவனத்தில் இருந்து அவர் சைக்கிளில் விழுப்புரத்திற்கு புறப்பட்டு விட்டார். ஆனால் விழுப்புரத்திலும் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. அங்கேயும் அவருக்கு பஸ் கிடைக்கவில்லை.

பாண்டியனின் தவிப்பை பார்த்த அங்கிருந்த முகம் தெரியாத ஒருவர் அவருக்கு 50 ரூபாய் பணமும், தண்ணீர் பாட்டிலும் கொடுத்துள்ளார். ஆனால் பாண்டியனிடம் பணம் இருந்துள்ளது. அவரது மூத்த மகன் கத்தாரில் இருந்து அனுப்பிய பணத்தை பாண்டியன் வைத்திருந்தார். இதனை அந்த முகம் தெரியாத மனிதரிடம் பாண்டியன் எடுத்து சொல்லியும், அவர் உதவி செய்துள்ளார்.

இதன்பின்பு விழுப்புரத்தில் இருந்து சைக்கிளிலேயே உளுந்தூர்பேட்டைக்கு பாண்டியன் வந்துள்ளார். அங்கு இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றதும், அதன் உரிமையாளர் பாண்டியனை சரியாக அடையாளம் கண்டு கொண்டார். அந்த ஹோட்டல் உரிமையாளரும் நாங்குநேரியை சேர்ந்தவர்தான். நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர்கள், பல ஊர்களிலும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிட்டத்தது.

பாண்டியன் அங்கிருந்து புறப்பட்ட சமயத்தில், அந்த ஹோட்டல் உரிமையாளர், 1,000 ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் ஒரு காய்கறி வண்டியில் சைக்கிளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு வந்து சேர்ந்துள்ளார் பாண்டியன். அதற்கு பிறகு சைக்கிள் ஓட்டிக்கொண்டே விராலிமலைக்கு பாண்டியன் வந்துள்ளார். அங்கிருந்த ஒரு டீ கடையில் அவர் டீ குடித்துள்ளார். ஆனால் அந்த கடைக்காரர் அதற்கு பணம் வாங்கவில்லை.

அத்துடன் அவரது கடை வாசலில் அன்று இரவு தூங்கி கொள்ள அனுமதியும் வழங்கியுள்ளார். மேலும் அங்கு இருந்த கடைக்காரரிடம் பாண்டியன் கேட்பதை எல்லாம் கொடுக்குமாறு கூறி விட்டும் சென்றார். இப்படி பயணத்தின் வழி நெடுக கிடைத்த உதவிகளால் பாண்டியன் மனம் நெகிழ்ந்து போனார். அதன்பின்னர் மதுரை, விருதுநகர் பகுதிகளில் வரும்போதெல்லாம் நல்ல மழை பெய்ததாக பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும் சாத்தூர், கோவில்பட்டி போன்ற பகுதிகளிலும் பலமான காற்று வீசியதாகவும், இதனால் சைக்கிளை ஓட்ட முடியாமல் தள்ளி கொண்டு வந்ததாகவும் பாண்டியன் கூறியுள்ளார். ஜூன் 23ம் தேதி சென்னையில் இருந்து கிளம்பிய பாண்டியன் ஒரு வழியாக கடந்த ஜூலை 1ம் தேதி தனது சொந்த ஊரான தெய்வநாயகப்பேரியை வந்தடைந்துள்ளார்.

இந்த ஒன்பது நாட்கள் பயணத்தில் பல நல்ல மனிதர்களை பாண்டியன் சந்தித்துள்ளார். தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து சைக்கிள் ஓட்டிய அவர், இரவு 7 மணிக்கு மேல் பயணம் செய்வதை தவிர்த்துள்ளார். ஆனால் ஊருக்கு வந்ததும் அவர் நேராக வீட்டிற்கு சென்று விடவில்லை என்பதை இங்கே கட்டாயமாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஊர் எல்லையில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமி கோயிலில், அவர் கடந்த 15 நாட்களாக தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்த நிலையில், நேற்று (ஜூலை 16ம் தேதி) தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தன்னால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனிமைப்படுத்துதல் காலத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

என்னதான் இருந்தாலும், நல்ல மனம் படைத்த பலர் இன்னும் இந்த உலகத்தில் இருக்கவே செய்கிறார்கள் என பாண்டியன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த மனிதர்கள்தான் தன் கைக்காசை செலவழிக்கவே விடாமல், தன்னை சொந்த ஊர் கூட்டி வந்து சேர்த்திருப்பதாகவும் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








