தமிழ்நாட்ல இருந்து இலங்கைக்கு கப்பல்ல போக கட்டணம் இவ்ளோதானா! அப்ப குடும்பத்தோட ஜாலியா கௌம்பீர வேண்டியதுதான்!
தமிழ்நாட்டில் (Tamil Nadu) இருந்து கப்பல் வழியாக இலங்கை (Sri Lanka) செல்ல வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உள்ளது. இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், நாளை (அக்டோபர் 10) முதல், தமிழ்நாட்டில் இருந்து கப்பல் மூலமாக நீங்கள் இலங்கைக்கு செல்ல முடியும்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டிணத்தில் (Nagapattinam) இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு (Kankesanthurai) ஒரு சமயத்தில் கப்பல் போக்குவரத்து இயங்கி வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கப்பல் பயணம் நாளை முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இந்த கப்பல் பயணம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என காத்து கொண்டிருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு (Shipping Corporation Of India) சொந்தமான ஹெச்எஸ்சி செர்யபாணி (HSC Cheriyapani) கப்பல்தான், நாகப்பட்டிணம்-காங்கேசன்துறை இடையே பயணிகளை அழைத்து செல்லவுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று (அக்டோபர் 8) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டிணம் சிறு துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு இந்த கப்பல் தனது சோதனை ஓட்டத்தை தொடங்கியது. நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான தொலைவு 60 நாட்டிகல் மைல்கள் ஆகும். இந்த தொலைவை 4 மணி நேரத்திற்கு உள்ளாகவே இந்த கப்பல் கடந்து விட்டது.

தெளிவாக சொல்வதென்றால், மதியம் 1.15 மணிக்கு இந்த கப்பல் காங்கேசன்துறைக்கு சென்று சேர்ந்து விட்டது. பின்னர் மறுமார்க்கத்தில் மதியம் 1.45 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய இந்த கப்பல் மாலை சுமார் 6 மணியளவில் மீண்டும் நாகப்பட்டிணம் சிறு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலுக்கான டிக்கெட்களை விற்பனை செய்வதற்காக தனியார் டிராவல் ஏஜென்சி ஒன்றுடன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கை கோர்த்துள்ளது. அது கேபிவி ஷேக் முகமது ராவுத்தர் & கோ பிரைவேட் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனத்தின் இயக்குனர் சையது ஜூஹைர், இந்த கப்பலின் டிக்கெட் விலை (Ticket Price) குறித்து பேசியுள்ளார்.
இதன்படி ஒரு வழி பாதைக்கான டிக்கெட் கட்டணம் 7,670 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் பயணத்தின்போது ஒவ்வொரு பயணியும் 50 கிலோ லக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 150 பயணிகள் பயணம் செய்ய முடியும். இதுதவிர 14 ஊழியர்களும் இருப்பார்கள்.
இது சர்வதேச பயணம் என்பதால், நாகப்பட்டிணம் சிறு துறைமுகத்தில், இமிகிரேஷன் மற்றும் வெளியுறவு துறை போன்றவற்றின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளன. சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF - Central Industrial Security Force), இந்த கப்பல் சேவையை கையாளும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரயில்களிலும், விமானங்களிலும், பஸ்களிலும் பயணம் செய்து பயணம் செய்து களைத்து போனவர்களுக்கு, தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையேயான இந்த கப்பல் பயணம் உற்சாகத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கலாம். வேலை விஷயமாக பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி, பயண ஆர்வலர்களையும் இந்த கப்பல் ஈர்க்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








