மு.க.ஸ்டாலினை வியக்க வைத்த தமிழக மாணவர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா நீங்களும் அசந்து போயிருவீங்க!
விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் கூட தொற்றுக்கு ஆளாகி வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளார்.

முகமது சாகுல் அமீது என்ற அந்த மாணவரின் கண்டுபிடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திமுக தலைவரும், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளவருமான மு.க.ஸ்டாலினும் அந்த மாணவரை இதற்காக பாராட்டியுள்ளார். பேட்டரியில் இயங்கும் கார் ஒன்றை முகமது சாகுல் அமீது உருவாக்கியுள்ளார். இதில், வைஃபை வசதியும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த காரில் தட்டு வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்தை இந்த தட்டில் வைத்து அனுப்ப முடியும். மேலும் இந்த காரில் கேமரா வசதியும் இருக்கிறது. இதன் மூலம் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன், மருத்துவர்கள் கலந்துரையாடலாம். ஆலோசனைகளை வழங்கலாம்.

இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும். இந்த பேட்டரி காரை உருவாக்கியதற்காக, கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில், இளம் விஞ்ஞானிக்காக கலாம் விருது முகமது சாகுல் அமீதுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்ற விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை, திமுக தலைவரும், தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளவருமான மு.க.ஸ்டாலினிடம் முகமது சாகுல் அமீது காட்டியுள்ளார். அப்போது முகமது சாகுல் அமீதுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலை தளங்களிலும் தற்போது முகமது சாகுல் அமீதுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முகமது சாகுல் அமீதை போல் இன்னும் பலரும் தங்களால் இயன்ற அளவிற்கு நோயாளிகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இதில், மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜாவேத் கான் குறிப்பிடத்தக்கவர். இவர் தனது சொந்த செலவில் தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இதில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் வசதியும் உள்ளது.

இந்த ஆட்டோ-ஆம்புலன்ஸ் மூலம் ஜாவேத் கான், நோயாளிகளுக்கு இலவசமாக சேவையாற்றி வருகிறார். ஆனால் ஒரு குடும்பத்திற்கு உதவி செய்து கொண்டிருந்த நேரத்தில், ஜாவேத் கானுக்கு போபால் காவல் துறையினர் அபராதம் விதித்து விட்டனர். பின்னர் அவரை பற்றிய தகவல்கள் தெரியவந்ததும், அவர் மீதான நடவடிக்கைகளை காவல் துறையினர் கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை போல் இன்னும் பலர் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை விற்பனை செய்தும், சேமிப்பில் இருந்த பணத்தை செலவழித்தும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவும், உரிய சிகிச்சை கிடைக்கவும் உதவி செய்து வருகின்றனர். கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தியுள்ள இக்கட்டான காலகட்டம், நமக்கு உள்ளேயே இருக்கும் நல்ல மனிதர்களை இந்த சமுகத்திற்கு அடையாளம் காட்டி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.


Click it and Unblock the Notifications








