களத்தில் இறங்கிய போலீஸ்... மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்...
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய சாலைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணித்து வருகின்றன. போதாக்குறைக்கு வாகன ஓட்டிகளும், பாதசாரிகள் ஒரு சிலரும், வேகமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்களுக்கு தேவையில்லாமல் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்னைகள் எல்லாம் சமாளித்து, நோயாளிகளின் உயிரை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

சில சமயங்களில் மனித உடல் உறுப்புகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு சென்றாக வேண்டிய சூழல் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஏற்படுகிறது. பலர் இந்த பணியை வெற்றிகரமாக செய்து, நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் சமூக வலை தளங்களில் மக்களின் பாராட்டுக்களை பெறுகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சிறுநீரகத்தை, மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு, அவர் வேகமாக கொண்டு சென்று சேர்த்துள்ளார். மதுரையில் இருந்து நாகர்கோவில் சுமார் 250 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

சாதாரணமாக சென்றால், மதுரையில் இருந்து நாகர்கோவிலை அடைய 4.30 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகலாம். ஆனால் இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மதுரையில் இருந்து நாகர்கோவிலை வெறும் மூன்றரை மணி நேரத்திற்கு உள்ளாகவே அடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மதுரையை சேர்ந்த வேல்முருகன் (27) என்பவருடைய சிறுநீரகம்தான், நாகர்கோவில் கொண்டு செல்லப்பட்டு, வெங்கடேஷ் என்பவருக்கு பொருத்தப்பட்டது. இதில், வேல்முருகன் விபத்து ஒன்றில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்த சோகத்திற்கு மத்தியிலும் கூட, வேல்முருகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர்.

இந்த சூழலில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்காக, வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரியவந்தது. வேல்முருகனின் சிறுநீரகத்தை, வெங்கடேசுக்கு பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்பின் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.

ஆம்புலன்ஸ் வரும் பாதையில், சுமார் 50 இடங்களில் தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததுடன், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் நாகர்கோவிலை சென்றடைய முடிந்தது. ஆனால் நாகர்கோவில் நகரில் ஒரு சில குறுகலான பகுதிகளில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

எனவே ஆம்புலன்ஸில் இருந்த சிறுநீரகம் காருக்கு மாற்றப்பட்டு, மருத்துவமனைக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் வெங்கேடசுக்கு அந்த சிறுநீரகத்தை மருத்துவர்கள் பொருத்தினர். இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


Click it and Unblock the Notifications








