இப்படி ஒரு பஸ்ஸை இறக்குவாங்கனு எதிர்பாக்கவே இல்ல! ஒன்னு-ரெண்டு இல்ல.. 5கப்பல் போன்ற பேருந்தை இறக்கியிருக்காங்க
தமிழ்நாடு சுற்றுலா துறையின் பக்கம் மக்களை ஈர்க்கும் பொருட்டு தமிழக அரசு அதிநவீன சொகுசு வசதிகள் நிறைந்த பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக ஐந்து லக்சூரி பேருந்துகள் புதிதாக சேவையில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த பேருந்துகளையே சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடி அசைத்து பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். தற்போது சுற்றுலா துறையின் சேவையில் இணைக்கப்பட்டு இருக்கும் இந்த பேருந்துகள் ஐந்தும் வால்வோ (Volvo) நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். அதிக சொகுசான பயணங்களுக்கு பெயர்போனதாக வால்வோ பேருந்துகள் உள்ளன.
இத்தகைய பேருந்துகள சுற்றுலா சேவையில் இணைக்கப்பட்டு இருப்பதால், வரும் நாட்களில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் என நம்பப்படுகின்றது. இந்த 5 பேருந்துகளையும் கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், "இயற்கை எழிலும், வரலாற்று சிறப்பு கொண்ட இடங்களும், கலைகளின் தொட்டிலும் என விளங்கும் தமிழ்நாட்டின், சுற்றுலாத்துறைக்குப் புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன்" என தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இத்துடன் புதிய பேருந்துகளின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த சொகுசு பேருந்துகள் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும், இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 35 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஆனால், இந்த ஐந்தில் ஒன்று மினி பேருந்து ஆகும்.
ஆகையால், அதில் 18 பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தும் நோக்கிலே இந்த மினி பேருந்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் இணைத்து உள்ளனர். ஆனால், மற்ற நான்கு பேருந்துகளும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. பயணங்களின்போது மிதக்கும் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டதே இந்த பேருந்துகள் வழங்கும்.

இதற்காக வால்வோ பேருந்துகளில் ஏர் சஸ்பென்ஷன் (air suspension) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, கூடுதல் பிரீமியமான டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த பேருந்தில் ஜிபிஎஸ், ஒய்-ஃபை மற்றும் ஏசி ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், பேருந்து எங்கே இருக்கின்றது என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் முடியும்.
அதேவேளையில், பயணங்களின்போது இணைய வசதியின் வாயிலாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எப்போதும் தொடர்பிலும் இருந்துக் கொள்ள முடியும். மேலும், செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக அனைத்து இருக்கைகளிலும் சார்ஜிங் பாயிண்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான பேருந்துகளையே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Tourism Development Corporation) உடன் தமிழக அரசு இணைத்து உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு சுற்றுத்துறை வசம் 17 உயர் வகை சொகுசு பேருந்துகள் பயன்பாட்டில் இருந்தநிலையில் மேலும் ஐந்து சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதனால், அதன் வசம் இருக்கும் சொகுசு பேருந்துகளின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்திருக்கின்றது. இதேபோல், மினி பேருந்தின் எண்ணிக்கையும் 16 ஆக உயர்ந்திருக்கின்றது.
பேருந்து பயன்பாட்டு தொடக்க நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடன்தொகைத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பேருந்துகள் தமிழக சுற்றுலாப் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் உள்ள இருக்கைகள் அதிகம் சாயும் திறன் கொண்டவை ஆகும். ஆகையால், இதில் பயணிக்கும் பெரிய அளவில் அசதி ஏற்படாது என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








