ரொம்ப அதிர்ஷ்டசாலியா இருப்பார் போல... தமிழக இளைஞருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? ஷாக் ஆயிடாதீங்க
தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, புதிய விதிமுறைகளின்படி மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றியது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது.

இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது மத்திய அரசின் திட்டமாக உள்ளது. இந்த சூழலில் உயர்த்தப்பட்ட புதிய அபராத தொகைகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்ட தொடங்கியுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவருக்கு ஹரியானா மாநிலம் குருகிராம் போலீசார் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 5 போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக அவருக்கு ஒட்டுமொத்தமாக 23,000 ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். ஆனால் அவர் ஓட்டி வந்த செகண்ட் ஹேண்ட் ஸ்கூட்டரின் விலையே வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான்!!!

இந்த சம்பவம் இந்தியா முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வேடிக்கையான மீம்ஸ்களும் உலா வர தொடங்கியுள்ளன. போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் உயர்த்தப்பட்டிருப்பதை பலர் வரவேற்று வருகின்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. அபராதம் மிகவும் கடுமையாக உள்ளது என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இது சாதாரண வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதை காரணமாக வைத்து வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையை தொடங்கி விடுவார்கள் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதே காரணத்திற்காக 5 மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய அந்த ஐந்து மாநிலங்களிலும் இன்னும் அபராதம் உயர்த்தப்படவில்லை. ஆனால் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் போலீசாரின் அதிரடி தொடங்கியுள்ளது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவருக்கு மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை தாறுமாறாக மீறிய தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, புதிதாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள விதிகளின்படி தற்போது மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் உள்ள கால்டுவெல் காலனி பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (29) என்பவர்தான் அந்த 'அதிர்ஷ்டசாலி'.

தமிழகத்தை பொறுத்தவரை, புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது விதிக்கும் பணிகளை போலீசார் இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் அந்த பணியை தொடங்கி விட்டன. சண்முகநாதனுக்கு நீதிமன்றம்தான் கடுமையான அபராதத்தை விதித்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்று (செப்டம்பர் 1) சண்முகநாதன் டூவீலரில் ஜாலியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சண்முகநாதன் ஹெல்மெட் அணியாமல் ஹாயாக காற்று வாங்கி கொண்டு வந்ததால், போலீசார் அவரை நிறுத்தினர். அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கையில், அவர் குடிபோதையில் வேறு இருப்பது தெரியவந்தது.

இது போதாதென்று அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் வேறு இல்லை. எனவே மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு விதிமுறைகளின் கீழ் சண்முகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவரது இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்பின் கடந்த செவ்வாய் கிழமையன்று (செப்டம்பர் 3) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய விதிமுறைகளின்படி சண்முகநாதனுக்கு அதிரடியாக 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாயும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக 5 ஆயிரம் ரூபாயும், ஹெல்மெட் அணியாமல் டூவீலரை ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாயும் என அவருக்கு மொத்தமாக 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக கடைபிடியுங்கள். இல்லாவிட்டால் அபராதத்தை செலுத்துவதற்காக நீங்கள் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஏனெனில் அந்த அளவிற்கு அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








