கல்யாண மண்டபம் இப்போ வீட்டுக்கே வருது... வாடகை ரொம்ப கம்மி... எவ்ளோனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...
கொரோனா பிரச்னையால் திருமணங்கள் களையிழந்துள்ள சூழலில், தற்போது கல்யாண மண்டபம் உங்கள் வீட்டிற்கே வருகிறது.

இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. கார் மற்றும் பைக் என அனைத்து விதமான வாகனங்களும், பல்வேறு வழிகளில் மாடிஃபிகேஷன் செய்யப்படுகின்றன. கூடுதல் கவர்ச்சிக்காக வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்பவர்களே இங்கு அதிகம். இன்னும் சிலர் கூடுதல் சௌகரியம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்கின்றனர்.

எனினும் தொழில் நிமித்தமாக வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்பவர்களை காண்பது மிகவும் அரிதான ஒரு விஷயம்தான். அப்படிப்பட்ட அரிய நபர்களில் ஒருவர்தான் அப்துல் ஹக்கீம். இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர். அப்துல் ஹக்கீம் தனது லாரியில் செய்திருக்கும் ஒரு மாடிஃபிகேஷன் தற்போது தமிழகம் முழுக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு பிரச்னையால் தற்போது திருமணங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. எனவே மண்டபங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த திருமணங்கள் எல்லாம் தற்போது வீடுகளில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற தொடங்கி விட்டன. முன்பு நடைபெற்ற திருமணங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய திருமணங்களில் பல விஷயங்கள் 'மிஸ்' ஆகின்றன.

இதில், மிகவும் முக்கியமானது மண மேடை. திருமணங்களுக்கான மண மேடையை அலங்கரிப்பதற்கு என பல லட்சங்களை வாரி இறைப்பவர்களும் கூட இங்கு இருக்கின்றனர். ஆனால் கொரோனா பிரச்னைக்கு பின்னர் நடக்கும் திருமணங்களில் மண மேடை 'மிஸ்' ஆவது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது. அப்படிப்பட்டவர்களின் குறையை அப்துல் ஹக்கீம் நிவர்த்தி செய்து வருகிறார்.

அடிப்படையில் ஓவியரான அப்துல் ஹக்கீம் 'ஸ்டேஜ் டெக்கரேஷன்' தொழில் செய்து வருகிறார். ஆனால் கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அவரது தொழில் பாதிக்கப்பட்டது. இருந்தபோதும் அதற்காக எல்லாம் அப்துல் ஹக்கீம் சோர்ந்து விடவில்லை. மாற்று வழி என்ன? என்பது குறித்து அவர் யோசிக்க தொடங்கினார்.

அப்துல் ஹக்கீமிடம் லாரி ஒன்று உள்ளது. அந்த லாரியை திருமண மேடையாக மாற்றி விட்டால் என்ன? என்ற யோசனை அப்துல் ஹக்கீமின் மனதிற்குள் உதித்தது. வெறும் யோசனையுடன் நின்று விடாமல், உடனடியாக அதனை செயல்படுத்த தொடங்கினார். இதன்படி லாரியின் பின் பகுதியை அச்சு அசலாக திருமண மேடையாக அவர் மாற்றியுள்ளார்.

இந்த மண மேடையில், மணமக்கள் அமர்வதற்கான சோபா, இரண்டு பக்கமும் ஏர் கூலர்கள், பூந்தொட்டிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் மங்கல வாத்தியத்திற்காக ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டிருப்பதுடன், மின் விளக்கு அலங்காரமும் அமர்க்களப்படுத்துகிறது. அத்துடன் மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் ஏறி வருவதற்காக படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், சிகப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த மண மேடைக்கு கீழாக நாற்காலிகளை போட்டு அமர்ந்தால், அப்படியே திருமண மண்டப களை வந்து விடும். எனவே இந்த லாரியை மினி திருமண மண்டபம் என்றே சொல்லலாம். 17 அடி நீளம் கொண்ட லாரியின் பின் பகுதியை, திருமண மேடை கெட்டப்பிற்கு அப்துல் ஹக்கீம் கொண்டு வந்துள்ளார்.

இந்த நடமாடும் திருமண மண்டபம் தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. இந்த வாகனத்தை உங்கள் வீட்டிற்கு முன் பகுதியிலோ அல்லது உங்களுக்கு சௌகரியமான பகுதியிலோ நிறுத்தி, திருமண நிகழ்ச்சியை நடத்தி விடலாம். திருமணத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வழங்குவதும் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மண்டபத்திற்கு ஆகும் செலவில் வெறும் கால்வாசி மட்டுமே, இந்த வாகனத்தில் திருமணத்தை நடத்துவதற்கு ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறைவான செலவு என்பதோடு, மண்டபத்தில் திருமணத்தை நடத்தியது போன்ற திருப்தியும் கிடைக்கும். எனவே அப்துல் ஹக்கீமின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








