ரூ.2100 கோடியில் இதுமட்டும் நடந்துவிட்டால் சென்னையை மொத்த நாடும் திரும்பி பார்க்கும்! பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு பட்ஜெட் (Tamilnadu Budget) 2025-26ஆம் நிதியாண்டிற்காக பல அட்டகாசமான திட்டங்களுடன் இன்று (மார்ச் 14) சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த முறையும் பல்வேறு துறைகளை சார்ந்த திட்டங்கள் அடங்கிய கலவையாக தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பட்ஜெட் உள்ளது. மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து விண்வெளி சார்ந்த தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிப்பதற்கான நிதி வரையில் என பல துறைகளுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாநில பட்ஜெட்டை வகுத்துள்ளார். குறிப்பாக, மாநில போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் நிறைய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
மொத்தமாக மாநில போக்குவரத்து துறைக்கு மட்டும் சுமார் ரூ.12 ஆயிரத்து 984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரூ.13 ஆயிரம் கோடியை வைத்து மெட்ரோ விரிவாக்கம், டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவது, புதியதாக எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்குவது என பல்வேறு நடவடிக்கைகளில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அடுத்த ஒரு வருடத்தில் ஈடுப்பட உள்ளது.

இந்த வகையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்திய அளவில் நீளமான சாலை கட்டமைப்பை கொண்ட மாநிலங்களுள் நமது தமிழ்நாடும் ஒன்றாகும். ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அடைய தரமான சாலை வசதிகள் அவசியமாகும். இதனை நன்கு புரிந்துக் கொண்டு நமது தமிழ்நாடு அரசு மோட்டார் வாகனங்களின் விற்பனையை அதிகரித்து வருகிறது.
மேலும், மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றமும் ஒரு வகையில் சாலை கட்டமைப்பை சார்ந்தே உள்ளது. இதனாலேயே, கடந்த 4 வருடங்களில் சுமார் 16,500கிமீ தொலைவிற்கு புதியதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஏற்கனவே இருந்த சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த 16,500கிமீ சாலை மேம்பாட்டு திட்டங்களில் 2,130கிமீ-க்கு முக்கிய 4-வழி சாலைகள் மற்றும் 2-வழி சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், 5,000கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இத்தோடு நிற்காமல் மாநிலத்தின் சாலை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை 2025-26 மாநில பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். முக்கியமாக, தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
அதன் ஒருபகுதியாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரையில் 14.2கிமீ தொலைவிற்கு 4 வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள இந்த உயர்மட்ட சாலை விரிவாக்க பணிகளுக்காக ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேம்பாலங்களை போன்றதுதான் உயர்மட்ட சாலைகள் ஆகும். ஆனால், மேம்பாலங்கள் குறுகிய தொலைவில் முடிந்துவிடும். அதுவே, உயர்மட்ட சாலைகள் பல கிமீ தொலைவிற்கு நீண்டுக்கொண்டே போகும். மெட்ரோ இரயில் சேவைக்காக அமைப்பதை போலவே, நன்கு உயரமான தூண்கள் உடன், ஏற்கனவே இருக்கும் சாலைகளின் போக்குவரத்தை பாதிக்காத வகையில் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படுகின்றன.
சென்னையில் அமையவுள்ள இத்தகைய உயர்மட்ட சாலை உடன், அடுத்த 1 வருடத்தில் கோயம்புத்தூர் மேற்கு பகுதியில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் 12.5கிமீ-க்கு புறவழிச்சாலை மற்றும் திருநெல்வேலி மேற்கு பகுதியில் ரூ.225 கோடி மதிப்பீட்டில் 12.4கிமீ நீளத்திற்கு புறவழிச்சாலை என மொத்தம் ரூ.1,713 கோடி மதிப்பீட்டில் 14 புறவழிச்சாலைகள் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு பட்ஜெட்டில் சாலை விரிவாக்க திட்டங்கள் இருப்பது வழக்கமான ஒன்றே. ஆனால், நாடு முழுவதும் டிரெண்ட் ஆகி வரும் உயர்மட்ட சாலை கான்செப்ட்டிற்குள் இந்த முறை நம் தமிழ்நாடு அரசு நுழைந்துள்ளது. இந்த சாலைகளினால் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறைக்கப்படும் என்றாலும், அதற்கேற்ப இவ்வாறான உயர்மட்ட சாலைகளை அமைப்பது செலவு மிகுந்த பணியாக உள்ளது.


Click it and Unblock the Notifications









