விலங்குகள் கடந்து செல்ல தமிழகத்தின் முதல் "அனிமல் கிராஸ் ஓவர் " பாலம்.. எங்கு அமைகிறது தெரியுமா?
வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் விலங்குகள் கடந்து செல்ல பாலம் ஒன்று அமைக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அமையவுள்ள இந்த பாலம் குறித்த விரிவாகத் தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

மனித நாகரீகம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரத் துவங்கியது போது தான் வளர துவங்கியது. மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு நகர்கிறானோ அவர் நாகரீக ரீதியாக வளர்ந்து கொண்டே இருக்கிறான் என அர்த்தம். உலகில் மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கு 3 வகையான போக்குவரத்து தான் இருக்கிறது. நிலம், நீர், ஆகாயம். அதில் நிலத்தில் சாலைகள் அமைக்கப்படுவது மூலம் ஒரு மனிதன் ஒரு இடத்தலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிமையாக நகர முடிகிறது. மற்ற இரண்டு வழிகளும் சற்று கடினமானது தான்.

இப்படியாக அதிகமான மக்கள் பயன்படுத்துவது சாலைகள் தான் இந்தியா முழுவதும் மக்கள் ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்கு நகர தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த சாலைகளைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் சென்று விட முடியும். ஆனால் இந்த சாலைகள் அமைக்கப்படும் போது பல இயற்கை வளங்கள் நாசம் ஆகுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மத்திய அரசு சாலைகள் அமைக்கப்படும் போது முடிந்தளவு இயற்கை வளங்களுக்குத் தொந்தரவு செய்யாத படி சாலைகளைக் கட்டுமானம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் வாடிப்பட்டிலிருந்து சிட்டம்பட்டி வரை புதிதாகத் தேசிய நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. இதற்காக 555 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலை பெரும்பாலான பகுதி ஊருக்குள் சென்றாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் வனப்பகுதி வழியாகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

வனப்பகுதிக்குள் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டால் வன விலங்குகள் நெடுஞ்சாலைகளுக்குக் குறுக்கே வரும் இதனால் விபத்துக்கள் நடக்கக்கூடும், இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் வாகனங்களின் ஒளி மற்றும் ஒலி விலங்குகளைத் தொந்தரவு செய்யும். மேலும் சாலைகள் கடக்கும் முடியாமல் விலங்குகள் திண்டாடுவதால் விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் அழிந்து போகும் நிலை கூட ஏற்படும் என இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது கருதப்பட்டது.

இதையடுத்து அரசு இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் வகையில் இந்த பகுதியில் அனிமல் கிராஸ் ஓவர் பாலம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வகுத்து மலைப்பகுதியில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கான பணி 80 சதவீதம் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்த பாலத்தை "பாரத்மாலா பரியோஜனா" திட்டத்தின் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையானது ஒரு மலையை குடைந்து அதை இரண்டு பிரிவாகப் பிரிப்பதால் அந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் வகையில் சுமார் 210 மீட்டாருக்கு இந்த பாலத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அனுமதியைத் தமிழக வனத்துறையும் வழங்கியுள்ளது. மேலும் இந்த விலங்குகள் கடந்து செல்லும் பலத்தின் அருகே நெடுஞ்சாலைகளின் ஒளி ஒலியால் விலங்குகள் தொந்தரவு ஏற்படாதவாறு வேலிகள் அமைக்கப்படும் மேலும் பாலத்தின் பகுதியில் நீர் குட்டைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் தான் தமிழகத்தில் முதல் விலங்குகள் கடப்பதற்கான பாலம். இந்தியாவில் முதல் விலங்குகள் கடப்பதற்கான பாலம் டில்லி- மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் கட்டப்பட்டது. இந்த பாலம் ரத்தப்போர் விலங்குகள் சரணாலயம் இருக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையிலேயே மொத்தம் 5 இடங்களில் விலங்குகள் கடந்து செல்லும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பாலம் அமைக்கப்படும் வகுத்து மலை வனப்பகுதியில் புலிகளோ, யானைகளே இல்லை. இந்த காட்டில் சிறிய விலங்குகளான முயல்கள், நரிகள், காட்டுப் பன்றிகள், பாம்புகள் அதிகம் இருக்கின்றது. சில பகுதிகளில் காட்டு எருமைகளும் உள்ளன. அந்த விலங்குகள் இந்த பாலத்தைப் பயன்படுத்தி ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குக் கடந்து செல்ல முடியும். இந்த பாலம் கட்டமைக்கப்பட்டவுடன் இந்த பாலத்தின் மீது மண் கொட்டப்பட்டு புற்கள், செடிகள், மரங்கள், ஆகியவற்றை வளர்க்க ஏற்பாடு செய்யப்படும். அதன் பின்னர் இது காடாகவே மாறிவிடும்.

இந்த பாலம் இன்னும் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் இது விலங்குகளின் பழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டும். அதன் பின் தான் நெடுஞ்சாலைகளின் பணிகள் முடிவடையும். அதனால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல துவங்கும் போது இந்த காட்டில் உள்ள விலங்குகள் ஏற்கனவே இந்த பாலத்தைப் பயன்படுத்தப் பழகியிருக்கும். இதனால் விலங்குகளுக்கு நெடுஞ்சாலையால் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications