பசுமை பாதையாக மாறிய ராமேஸ்வரம்- மானாமதுரை ரயில் வழித்தடம்: என்ன சிறப்பு?
மின்னணு தகவல் பலகைகள், வைஃபை இன்டர்நெட் தொடர்பு வசதி, உயர்தர உணவு விடுதிகள், பளபளக்கும் நடைமேடைகள் என ரயில் நிலையங்களும், ரயில் பெட்டிகளும் ஒருபுறம் நவீனமாகியிருந்தாலும், ரயில் பெட்டிகளின் கழிவறையிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகளுக்கு விடிமோட்சனமே இல்லையா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு.
குறிப்பாக, ரயில் நடைமேடையில் ரயிலுக்காக காத்திருக்கும்போது, தண்டவாளங்களில் கிடக்கும் மனிதக் கழிவுகளால் சகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தநிலையில், இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்கான தீவிர முயற்சிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டிருக்கிறது. அவ்வாறு, எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக, ராமேஸ்வரம்- மானாமதுரை இடையிலான ரயில் பாதை மனிதக் கழிவுகள் வெளியேறாத நாட்டின் முதல் பசுமை ரயில் பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது.

துவக்க நிகழ்ச்சி
கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மானாமதுரை- ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதையை நாட்டின் முதல் பசுமை ரயில் பாதையாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொளி காட்சி மூலமாக துவங்கி வைத்தார்.

தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா திட்டத்தின்படி, ரயில் பெட்டிகளில் இந்த பயோ- டாய்லெட் வசதி செய்யப்பட்டு பசுமை வழித்தடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அதில், மானாமதுரை- ராமேஸ்வரம் இடையிலான ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பயோ- டெய்லெட் வசதியுடன் இயக்கப்படுகிறது. எனவே, இதனை நாட்டின் முதல் பசுமை வழித்தடம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

பசுமை வழித்தடம்
இந்த பசுமை ரயில் பாதையில் மனிதக் கழிவுகள் கொட்டாத வகையில், இந்த பாதையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களின் பெட்டிகளிலும் பயோ- டெய்லெட் எனப்படும் விசேஷமான உயிரி கழிவறைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

ரயில்களின் எண்ணிக்கை
இந்த வழித்தடத்தில் 16 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 14 ரயில் நிலையங்கள் அமைந்திருக்கின்றன. இதன்மூலமாக, நாள் ஒன்றுக்கு சுமார் 35,000 பேர் பயணிக்கின்றனர். இந்தநிலையில், இங்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயோ- டெய்லெட் பொருத்தப்பட்டிருக்கின்றன.

தீவிர முயற்சி
கடந்த ஜூன் மாதம் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும் 276 பெட்டிகளில் 1,041 பயோ- டாய்லெட் கழிவறைகள் பொருத்தப்பட்டன. இந்த கழிவறைகளிலிருந்து மனிதக் கழிவுகள் வெளியேறாது என்பதால், இனி மூக்கைப் பிடிக்காமல் ரயில் நிலையங்களில் காத்திருக்கலாம்.

விசேஷ தொழில்நுட்பம்
பயோ- டாய்லெட் எனப்படும் இந்த உயிரி கழிவறையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டி போன்ற இந்த பயோ- டாய்லெட்டுகள் கழிவறைகளுடன் எளிதாக இணைக்க முடியும். இந்த கழிவறைகளில் 6 கட்டமாக மனிதக் கழிவுகள் மக்கச் செய்யப்படுகிறது.

பாக்டீரியாவே துணை
இந்த உயிரி கழிவறைகளில் இருக்கும் ஒரு வகை நன்மை செய்யும் பாக்டீரியா மூலமாக மனிதக் கழிவுகள் செரிக்க வைக்கப்படுகிறது. இறுதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் மட்டும் இந்த கழிவறையிலிருந்து வெளியேறும்.

பசுமை ரயில் நிலையம்
நாட்டின் முதல் பசுமை ரயில் நிலையம் என்ற பெருமையையும் ராமேஸ்வரம் பெறுகிறது. இங்கிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பயோ- டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், பயோ- டாய்லெட் முறையாக இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கும் சிறப்பு மையம் ஒன்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மகிழ்ச்சி...
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு வருபவர்களுக்கும், ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இது மகிழ்ச்சி தரும் செய்தியாகவை அமைந்திருக்கிறது.

விறுவிறுப்பு
பயோ- டாய்லெட்டுகளை தயாரித்து அனுப்பும் பணியில் ரயில்வே துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் வரை 40,000 பயோ- டாய்லெட்டுகள் பல்வேறு ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 7,000 பயோ- டாய்லெட்டுகளை அனுப்பும் பணியும் நடந்து வருகிறது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செலவு மிச்சம்
தற்போது ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் வெளியேறும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான பராமரிப்பு செலவும் மிச்சமாகும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, தண்டவாளங்களும் மனிதக் கழிவுகளின் ரசாயனத்தால் பாதிக்கப்படாது.

விரிவாக்கம்
ராமேஸ்வரம்- மானாமதுரை இடையிலான வழித்தடத்தை தொடர்ந்து, ஒகா- கனலாஸ் இடையிலான 141 கிமீ தூரம் கொண்ட ரயில் வழித்தடமும், போர்பந்தர்- வன்ஜலியா இடையிலான 34 கிமீ தூரத்திற்கான வழித்தடத்திலும், ஜம்மு- கத்ரா இடையிலான 78 கிமீ தூரத்திற்கும் பசுமை வழித்தடங்களாக மாற்றப்பட உள்ளன.

180 கிமீ வேகத்தை தொட்டு டால்கோ ரயில் சாதனை... டெல்லி- சென்னை இடையே டால்கோ ரயில் கனவுடன் நாம்... !!


Click it and Unblock the Notifications








