எங்கடா காணாம போயிடுச்சோன்னு நினைச்சோம்! மினி பஸ்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்த தமிழக அரசு!
தமிழகத்தில் தனியார் மினி பஸ்களை இயக்கி வரும் உரிமையாளர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே உள்ள மினி பஸ் திட்டத்தில் விரிவாக்கமாக புதிய திட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இதனால் பஸ் உரிமையாளர்கள் எப்படி பயன்பட போகிறார்கள்? மக்களுக்கு என்ன வகையில் பயன் கிடைக்கப் போகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக முழுவதும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் நடத்தும் இந்த மினி பஸ்கள் அரசு பஸ் இயக்கப்படாத ஊர்களுக்கு சிறிய சிறிய கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களால் ஏகப்பட்ட மக்கள் பலனடைந்து வருகிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்வதால் அவர்களின் தேவை சுலபமாக முடிகிறது.

தமிழகம் முழுவதும் தற்போது 2950 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு அதிகமான மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலின் போது மினி பஸ் உரிமையாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். இதனால் மினி பஸ் சேவை என்பது கணிசமான அளவில் குறைந்தது. தற்போது கொரோனா இல்லை என்றாலும் மினி பஸ் எண்ணிக்கை அதிகமாகவில்லை.
அதை நேரம் மினி பஸ்களுக்காக வழங்கப்பட்டுள்ள ரூட்கள் எல்லாம் தற்போது வளர்ச்சியை பெற்றுள்ளன. இதே நேரம் பல புதிய புறநகர் பகுதிகளும் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு புதிய விரிவான மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள விதிமுறையிலிருந்து இதில் பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி இதுவரை 20 கி.மீ வரை இயங்கி வந்த மினி பஸ்கள் இனி 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 17 கிலோ மீட்டர் தூரம் ஏற்கனவே அரசு பஸ்களில் சேவை இல்லாத வழிதடத்திலும் எட்டு கிலோமீட்டர் தூரம் ஏற்கனவே அரசு பஸ்களின் சேவை இருக்கும் வழித்தடத்திலும் இயங்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை தண்டையார்பேட்டை,ராயபுரம்,திருவிக நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, ஆகிய ஏழு மண்டலங்களில் மட்டும் மினி பஸ்கள் இயக்க அனுமதி இல்லை. அது தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மினி பஸ் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள திருவெற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர், ஆகிய பகுதிகளிலும் மினி பஸ் சேவை அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் மினிபஸ் கிளம்பும் இடத்திலோ அல்லது சென்று சேரும் இடத்திலோ, மருத்துவமனை, கல்வி நிறுவனம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் இருந்தால் அந்த மினிபஸ் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை கூடுதலாக பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக மினி பஸ் எங்கு பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதை டிராக் செய்ய அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான அனைத்து தகவல்களும் விரிவான மினி பஸ் திட்டம் குறித்து அரசிதழில் தமிழக அரசு வைத்துள்ள வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வரும் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை வைத்து வரும் 22ம் தேதி உள்துறைச் செயலர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு புதிய மினி பஸ் விரிவாக்கத் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் கீழ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தத் திட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு மீண்டும் ஒரு விரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல ஊர்கள் பஸ்கள் இயக்கப்படாமல் பொதுமக்கள் சொந்த வாகனங்களிலோ அல்லது நடந்து தான் வெளியூர்களுக்கு பயணிக்க வேண்டும் என்ற இருந்த காலத்தில், மினி பஸ் திட்டம் பல ஊர்களின் பஸ் கனவை நிறைவேற்றியது. தற்போது இந்த திட்டத்தை விரிவாக்குவதன் மூலம் தொடர்ந்து வளர்ந்து வரும் பல்வேறு சிறு சிறு பகுதிகள் எல்லாம் பெரிய அளவில் பயன்பட வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









