இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென அரசு பஸ்களை தேடி பிடித்து அபராதம் போடும் போலீசார்! உண்மை இது தான்!
தமிழக முழுவதும் இயங்கி வரும் தமிழக அரசின் பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் நேற்று மாலை முதல் விதிமுறைகளை மீறியதற்கான அபராதங்களை விதித்து வருகிறார்கள். பொதுவாக அரசு பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் சம்பவங்களை பெரிய அளவில் காண முடியாது. ஆனால் நேற்று முதல் இதை போக்குவரத்து போலீசார் துவங்கியுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சாலையில் விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பது வழக்கமான விஷயம்தான். நாம் கார், பைக்குகளில் செல்லும்போது சாலை விதிமுறைகளை மீறி பயணம் செய்தால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதை நாம் பார்த்திருப்போம். பல நேரங்களில் நமக்கே இப்படியான சம்பவம் நடந்திருக்கும்.

ஆனால் அரசு வாகனங்களான அரசு பஸ்களுக்கு பெரும்பாலும் போக்குவரத்து போலீசார் அபராதம் மிதிக்க மாட்டார்கள். இப்படியான காட்சியை பார்த்திருப்பது மிக அரிதான விஷயம் தான். என்னதான் அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்களான அரசு பஸ் டிரைவர்கள் ஆங்காங்கே சில சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டாலும், அதை போலீசார் கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளனர்.
ஆனால் நேற்று மாலை முதல் தமிழக முழுவதும் ஆங்காங்கே விதிமுறைகளை மீறும், தமிழக அரசு பஸ்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸுக்கு நோ பார்க்கிங் பகுதியில் பஸ்ஸை நிறுத்தி அதற்காக ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு பகுதியில் நோ என்ட்ரி பகுதி வழியாக வந்த அரசு பஸ் ஒன்றுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. இப்படியாக பல்வேறு இடங்களில் ஒரே நாளில் 12க்கும் அதிகமான அரசு பஸ்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். திடீரென போக்குவரத்து போலீசார் இப்படியான செயலில் இறங்கியுள்ளது. பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து விசாரித்த போது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ்ஸில் ஏறிய போலீசார் ஒருவர் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை நடத்துனர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது இதையடுத்து அந்த போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் அவர் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் போலீசார் இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது தமிழக அரசு பஸ்கள் மீது அபராதம் விதித்து வருவதாக போக்குவரத்து துறை ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். விதிமுறைப்படி போலீசார் போலீஸ் பணிக்கு வாரண்ட்டுடன் மட்டுமே அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய முடியும். இல்லையென்றால் அவர்கள் சொந்த காசு கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும்.
இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது போக்குவரத்து போலீசாரும் தமிழக அரசு பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டார்கள். தமிழக அரசு பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக அந்த அரசு பஸ்களை இயக்கும் ஊழியர்கள் மீதான நன்மதிப்பை கெடுக்கும் வகையிலான செயலாக இருக்கும். தமிழக அரசு பஸ்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை தமிழக அரசு தான் செலுத்த வேண்டும்.
ஆனால் இப்படியாக சட்ட விதிமுறைகளை மீறி ஒரு அரசு பஸ் டிரைவர் வாகனம் ஓட்டினால் அவரது பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சம்பவத்தில் அரசு பஸ் ஊழியர்களும் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். போலீசார் அரசு பஸ்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்வது தான் சரியான வழிமுறையாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போலீசாருக்கு டிக்கெட் கேட்ட விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர்கள் மீது கோபப்பட்டு போலீசார் இந்த நடவடிக்கையை பழிவாங்கும் நடவடிக்கையாக நினைத்து செய்யாமல் உண்மையாக சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் இருக்க வேண்டும். அதே நேரம் பஸ்களில் அனைத்து பயணிகளும் முறையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் இதை இரண்டு பிரிவினரும் சரியாகப் புரிந்து கொண்டால் எல்லாம் சிறப்பாக நடக்கும்


Click it and Unblock the Notifications









