வண்டிய ஒழுங்கா ஓட்டுங்க... நம்ம ஊரு மானமே போகுது... இதுல போயி முதல் இடத்த பிடிக்க வச்சுட்டோமே!
முன்னோடி திட்டங்களுக்காக முன்னுதாரணமாக கை காட்டப்படும் நம் தமிழகம் வாகன ஓட்டிகளால் இடம் பெறக் கூடாத ஓர் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மிக வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு அவற்றின் எண்ணிக்கை அதீத வேகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல் வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் விபத்துகள் மற்றும் விபத்தினால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலையே என்சிஆர்பி (National Crime Records Bureau) தற்போது வெளியிட்டிருக்கின்றது. இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, நாட்டில் சுமார் 4.22 லட்சம் விபத்துகள் அரங்கேறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த விபத்துகளால் 1.73 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக கூடுதல் அதிர்ச்சியளிக்கும் தகவலையும் அது வெளியிட்டுள்ளது. இது இந்தியாவில் 2021ம் ஆண்டில் மட்டுமே நடைபெற்ற விபத்துகளின் புள்ளி விபரங்கள் ஆகும்.

இதே விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டில் 3,68,828 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், இது 2021-இல் 4,22,659 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதை இது சுட்டிக் காட்டுகின்றது. மேலும், நாட்டில் போக்குவரத்து விதிமீறல்கள் மீண்டும் தலைவிரித்தாட தொடங்கியிருக்கின்றதோ என்கிற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழும்பச் செய்திருக்கின்றது.

வாகனங்கள் சார்ந்து அரங்கேறிய விபத்துகளின் விபரம்:
இந்தியாவில் வாகனங்களின் போக்குவரத்தைச் சார்ந்து 4,03,116 விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன. இந்த விபத்தினால் 1,55,622 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதிக வேகம், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது, தவறான பாதையில் பயணித்தது, கவனக்குறைவாக வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களாலேயே இந்தளவு அதிகமாக விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன.

ரயில் விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை:
சாலை போக்குவரத்தால் ஏற்பட்டிருப்பதைக் காட்டிலும் பல மடங்கு குறைவான எண்ணிக்கையிலேயே ரயில்கள் சார்ந்து விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இதில் பெரும்பாலான விபத்துகள் உயிர்காவை செய்திருக்கின்றன. 17,993 விபத்துகள் ரயில்கள் சார்ந்து அரங்கேறியிருக்கின்றன. இதுதவிர, ரயில் கிராஷிங்களிலும் சுமார் 1,550 விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன. இவற்றினால் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். அதாவது, ரயில் விபத்தில் சிக்கியவர்களில் சொற்பளவிலனோரே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கின்றனர்.

எந்த மாநிலம் சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களில் முதல் இடத்தில் உள்ளது?
உபி மாநிலத்திலேயே சாலை விபத்தால் அதிகப்படியானோர் இறந்திருக்கின்றனர். ஆகையால், இந்த விஷயத்தில் உபி-யே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு சாலை விபத்தினால் 24,711 பேர் உயரிழந்திருக்கின்றனர். இந்த மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. நம் மாநிலத்தில் சாலை விபத்தினால் 16,685 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை என்சிஆர்பி வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழகத்தில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.

விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு விஷயத்தில் வேண்டுமானால் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால், அதிகளவில் வாகன விபத்தைச் சந்தித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகமே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாகன ஓட்டுகளின் பொறுப்பற்ற செயலே தமிழகத்தின் இந்த நிலைக்கு காரணமாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் 46,443 விபத்துகள் மட்டுமே தமிழகத்தில் அரங்கேறியிருந்த நிலையில், 2021ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 57,090 ஆக உயர்ந்திருக்கின்றது.

2020 இல் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கையையே வாகன ஆர்வலர்கள் பல மடங்கு அதிகம் என வேதனை தெரிவித்திருந்தநிலையில், தற்போது விபத்துகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயர்ந்திருப்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவை அனைத்திற்கும் தமிழகத்தில் வாகன ஓட்டிகள் சரிவர விதிகளைக் கடைபிடிக்காததே காரணம் ஆகும்.

அதேவேலையில், நாட்டின் பிற மாநிலங்களிலும் விபத்துகளின் எண்ணிக்கையும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் சற்றே அதிகரித்துக் காணப்படுகின்றது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 2020 ஆம் ஆண்டில் 43,360 ஆக இருந்த விபத்தின் எண்ணிக்கை 2021 இல் 49,493 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், உபியில் 30,593 இல் இருந்து 36,509 ஆகவும், மஹாராஷ்டிராவில் 24,908 இல் இருந்து 30,086 ஆகவும், கேரளாவில் 27,998 இல் இருந்து 33,051 ஆகவும் விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கைகளை வைத்து பார்க்கையில் இந்தியாவின் தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதை உறுதியாக தெரிந்துக் கொள்ள முடிகின்றது.

ஆனால், உபி மாநிலத்திலேயே விபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால்தான், இந்த மாநிலம் விபத்தால் உயிரிழப்போர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சுமார் 24,711 பேர் விபத்தினால் உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 16,685 பேரும், மஹராஷ்டிராவில் 16,446 பேரும் விபத்தால் உயிரிழந்திருக்கின்றனர். இது கடந்த 2020ம் ஆண்டைக் காட்டிலும் அதிக உயிரிழப்புகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேலையில், மற்ற உபாதைகளால் இறப்போர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் விபத்தால் இறப்போர்களின் எண்ணிக்கைக் கணிசமாக குறைந்திருப்பதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் நாட்டில் அரங்கேறிய ஒட்டுமொத்த இறப்புகளில் 45.1 சதவீதம் விபத்தால் இறந்தவர்களாக இருந்தனர். ஆனால், 2021 இல் 44.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது இன்னும் பல மடங்கு குறைக்கும் பொருட்டு அரசுகள் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என நம்பப்படுகின்றது.
குறிப்பு: விபத்துகுறித்த அனைத்து படங்களும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








