500 புதிய விமானங்களை டாடா வாங்க போகுதா! இவ்ளோ பெரிய பிரம்மாண்ட ஆர்டரை யாருக்கு குடுக்க போறாங்க தெரியுமா?
விஸ்தாரா (Vistara) மற்றும் ஏர் ஆசியா இந்தியா (AirAsia India) ஆகிய விமான நிறுவனங்களை இந்தியாவை சேர்ந்த டாடா குழுமம் (Tata Group) நிர்வகித்து வருகிறது. விமான பயணிகள் மத்தியில் இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றன.
அத்துடன் ஏர் இந்தியா (Air India) நிறுவனமும் கூட டாடா குழுமத்தின் வசம்தான் இருக்கிறது. இந்திய அரசு நிர்வகித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் சமீபத்தில்தான் கையகப்படுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை புதுப்பிக்கும் பணிகளில் டாடா குழுமம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாடா குழுமம் தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏர் இந்தியா நிறுவனத்திற்காக டாடா குழுமம் மொத்தம் 500 விமானங்களை வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களான போயிங் (Boeing) மற்றும் ஏர்பஸ் (Airbus) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்த 500 விமானங்களையும் ஏர் இந்தியா வாங்கவுள்ளதாக தெரிகிறது. வரலாற்று முக்கியத்துவம் இந்த ஆர்டரை வழங்கும் விளிம்பில் டாடா குழுமம் தற்போது இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இதற்கான ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 500 விமானங்கள் என்பதால், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களாக இருக்கலாம். போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர்பஸ் ஏ350 (Airbus A350), போயிங் 787 (Boeing 787) மற்றும் (Boeing 777) ஆகிய விமானங்களை ஏர் இந்தியா நிறுவனத்திற்காக டாடா குழுமம் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், விமான நிறுவனம் ஒன்றால் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஆர்டர்களில் ஒன்றாக இது இருக்கலாம். இதற்கு முன்னதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) நிறுவனம் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக 460 போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது. இந்த ஆர்டரை எல்லாம், டாடா குழுமத்தின் செய்யவுள்ளதாக கூறப்படும் பிரம்மாண்ட ஆர்டர் விஞ்சி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், சுமார் 10 ஆண்டு காலத்திற்குள் 500 விமானங்களும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக டெலிவரி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகி வரும் இந்த தகவல்கள் தொடர்பாக போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அதேபோல் ஏர் இந்தியா நிறுவனமும் இது தொடர்பாக இன்னும் பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
டாடா குழுமம் விமான போக்குவரத்து மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு தொழில்களிலும் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதில், வாகன விற்பனையும் முக்கியமான தொழில்களில் ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ஒவ்வொரு மாதமும் 2வது அல்லது 3வது இடத்தை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பிடித்து வருகிறது.
ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய 2 நிறுவனங்களும் மாறி மாறி, 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்து வருகின்றன. இது கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை குறிக்கிறது. சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வரும் தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications