டெலிவரி எடுக்கும்போது ஸ்டார்ட் ஆகாமல் போன டாடா கார்! ஏன் தெரியுமா? அவங்க மேல இருந்த நம்பிக்கையே போயிருச்சு!
புதிய கார்களை டெலிவரி எடுக்கும்போது மனதில் ஏற்படும் உற்சாகம் ஈடு இணையற்றது. ஆனால் இந்தியாவில் சமீப காலமாக புதிய கார்களை வாடிக்கையாளர்கள் டெலிவரி எடுக்கும்போது நிறைய பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு சில வாடிக்கையாளர்கள் புதிய கார்களை டெலிவரி எடுத்த உடனேயே, எங்கேயாவது மோதி விடுகின்றனர்.
வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. இன்னும் ஒரு சில வாடிக்கையாளர்களோ, டீலர்ஷிப்பை கூட தாண்டுவதில்லை. டீலர்ஷிப் வளாகத்திலேயே விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். மறுபக்கம் டீலர்ஷிப் ஊழியர்கள் தரப்பிலும் தவறுகள் நடக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதற்கு உதாரணம்.

மஹிந்திரா டீலர்ஷிப் ஊழியர்கள், புத்தம் புதிய எக்ஸ்யூவி700 காரில், பெட்ரோலுக்கு (Petrol) பதிலாக டீசலை (Diesel) நிரப்பி விட்டனர். இதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இந்த சூழலில் தற்போது டெலிவரி நாளில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார், வாடிக்கையாளரின் கைகளுக்கு கிடைக்காமல் போயுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
மொகித் தவான் என்பவர் சமீபத்தில் டாடா அல்ட்ராஸ் காரை முன்பதிவு செய்திருந்தார். பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள ஜிராக்பூர் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு டாடா டீலர்ஷிப்பில், அல்ட்ராஸ் கார் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் டெலிவரி தினத்தன்று கார் ஸ்டார்ட் ஆகவில்லை.
பொதுவாக புத்தம் புதிய கார்கள், பேட்டரி உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் காரணமாக, சில சமயங்களில் ஸ்டார்ட் ஆகாமல் போகலாம். ஆனால் டெலிவரி கொடுப்பதற்கு முன்னதாக டீலர்ஷிப் மெக்கானிக்குகள் அனைத்தையும் தரவாக செக் செய்து விடுவார்கள். ஆனால் இந்த டாடா அல்ட்ராஸ் காரில் அனைத்து பாகங்களும் சரியாகதான் இயங்கி கொண்டிருந்தன.
ஆனால் எரிபொருள் டேங்க்கில்தான் பிரச்னை இருந்தது. ஸ்டார்ட் ஆகாத காரணத்தால், டீலர்ஷிப் ஊழியர்கள் காரை சோதனை செய்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த பிரச்னையை மொகித் தவான், தற்போது சமூக வலை தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக பெட்ரோல் காரில் டீசலையும், டீசல் காரில் பெட்ரோலையும் சில சமயங்களில் டீலர்ஷிப் ஊழியர்களோ அல்லது பெட்ரோல் பங்க் ஊழியர்களோ மாற்றி நிரப்பி விடுவார்கள். ஆனால் டெலிவரி நாளில், பெட்ரோல் டேங்க்கில் தண்ணீர் புகுந்திருப்பது குறித்து நாம் கேள்விப்படுவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்.
ஆனால் பெட்ரோல் டேங்க்கில் எப்படி தண்ணீர் புகுந்தது? என்பது இன்னும் தெரியவில்லை. இந்த பிரச்னை காரணமாக, டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவரி ரத்து செய்யப்பட்டு விட்டது. இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விசாரணை நடத்தி, உரிய விளக்கம் அளிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெலிவரி நாளில், கார் திடீரென கைக்கு கிடைக்காமல் போவது உண்மையிலேயே மிகவும் வேதனையான ஒரு விஷயம்தான். வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட கார் உற்பத்தி நிறுவனங்களும், டீலர்ஷிப்களும் முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம்.


Click it and Unblock the Notifications








