குடும்பத்தையே காப்பாற்றிய டாடா கார்! கொஞ்சம் கூட யோசிக்காமல் ஓனர் செய்த காரியம்
டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுள் ஒன்று. மிகவும் பாதுகாப்பான காராக அறியப்படும் டாடா அல்ட்ராஸில் ஒருவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி உள்ளார். அதில் அவரது அல்ட்ராஸ் கார் பெரிதும் சேதமடைந்துள்ளது. இருப்பினும், தனது உயிரை காப்பாற்றியதற்காக விபத்தில் சிக்கிய அந்த காரை பிராண்ட்-நியூ கண்டிஷனுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸில் பல்வேறு கார்கள் பாதுகாப்பு சோதனைகளில் முழு 5 நட்சத்திரங்களை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளன. அத்தகைய டாடா கார்களுள் ஒன்றுதான், அல்ட்ராஸ் ஆகும். சற்று பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக டாடா அல்ட்ராஸ் விளங்குகிறது. மிகவும் வலிமையானதாக உருவாக்கப்படுவதினாலேயே விபத்தில் பலரை அல்ட்ராஸ் கார் காப்பாற்றியுள்ள சம்பவங்களை இதற்கு முன்னர் பார்த்துள்ளோம்.

என்னதான், கார் பாதுகாப்பானதாக இருப்பினும் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக அதில் விபத்தில் சிக்க வேண்டியதாகி விடுகிறது. அவ்வாறுதான், ஆந்திராவை சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மலைப்பிரதேச சாலையில் தனது வெள்ளை நிற அல்ட்ராஸ் காரில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உள்ளார்.
மலைப்பிரதேச பகுதியில் அமைந்த சாலை என்பதால், வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த ஈச்சர் லாரியை கவனிக்காமல் அதன்மீது இந்த அல்ட்ராஸ் கார் டிரைவர் மோதி உள்ளார். இந்த மோதலில், அல்ட்ராஸ் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், கார் ஒரு பக்கமாக கவிழ்ந்துள்ளது. குறிப்பாக, காரின் முன்பக்க பம்பர் மற்றும் பொனெட் உள்ளிட்டவை அப்பளம் போல் நசுங்கியுள்ளன.

கார் ஒரு பக்கம் கவிழ்ந்ததில் காரின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. அதேநேரம், லாரியின் முன்பக்கமும் சிறிது சேதாரங்களை சந்தித்துள்ளது. சம்பவத்தின்போது அல்ட்ராஸ் காரினுள் 5 பேர் இருந்துள்ளனர். அல்ட்ராஸ் காரின் தரமான உடலமைப்பினால் விபத்தில் காருக்குள் இருந்த அனைவரும் மிகவும் சிறிய சேதாரங்கள் உடன் உயிர் பிழைத்துள்ளனர்.
பெரியதாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், விபத்திற்கு பின் காருக்குள் இருந்தவர்கள் தாங்களாகவே ஒரு பக்கம் சாய்ந்து கிடந்த அல்ட்ராஸ் காரில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அருகில் புனேவில் உள்ள டாடா சர்வீஸ் செண்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் செண்டரில் இருந்து ஒரு மீட்பு வாகனம் பாதிப்புக்கு உள்ளான அல்ட்ராஸ் காரை கொண்டு சென்றுள்ளது.
இதில், நாம் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், விபத்துக்குள்ளான அல்ட்ராஸ் காரை நன்றாக பட்டி, டிங்கரிங் பார்த்து அதன் உரிமையாளர் மீண்டும் அதனை பயன்படுத்த துவங்கியுள்ளார். புதியதாக ஷோரூமில் இருந்து வாங்கிய போது எவ்வாறான பளபளப்பான தோற்றத்தில் இருந்ததோ அவ்வாறான தோற்றத்துக்கு காரை மாற்றிக் கொண்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த டாடா அல்ட்ராஸ் காருக்கு அதன் உரிமையாளர் 2வது வாழ்க்கையை கொடுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், விபத்தில் அல்ட்ராஸ் கார் பெரியதாக சேதாரம் அடையாததும், இந்த காரின் உரிமையாளர் தனது காரின் மீது வைத்த பிணைப்பும் ஆகும்.


Click it and Unblock the Notifications








