பிரிட்டிஷ் அரசுக்கே வாழ்வளிக்க போகும் டாடா குழுமம்!! யுகே-இல் பேட்டரி தொழிற்சாலை... அப்போ நம்ம இந்தியாவுக்கு?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் யுனிடெட் கிங்டமில் புதிய பேட்டரி தொழிற்சாலையை நிறுவ உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவாமல், யுகே-இல் நிறுவுவதற்கு காரணம் என்ன? இந்த தொழிற்சாலைக்காக செலவிடப்பட உள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் இங்கிலாந்தில் தொழிற்சாலையை நிறுவ உள்ளதாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் இதுவரையில் டாடா மோட்டார்ஸில் இருந்து வெளி வரவில்லை.

இங்கிலாந்தை சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் அங்கு இருக்கும் ஊடகங்கள் கேட்ட போதிலும் இதுகுறித்து பதில் அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த தொழிற்சாலை ஆனது ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரின் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக டாடா உருவாக்கும் பேட்டரி தொழிற்சாலை ஆகும். இந்த பேட்டரி தொழிற்சாலையை இங்கிலாந்தில் சோமர்செட்டில் நிறுவுவதா அல்லது ஸ்பெயினில் நிறுவுவதா என்கிற முடிவில் டாடா உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த டாடா பேட்டரி தொழிற்சாலை குறித்த செய்திகள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக வெளிவந்து கொண்டிருப்பதால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு டாடா நிறுவனத்தில் இருந்து வெளியாகலாம். உண்மையில், இங்கிலாந்தில் பேட்டரி தொழிற்சாலை ஒன்று பயன்பாட்டிற்கு வருவது நிச்சயமாக பிரிட்டன் அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும்.

ஏனெனில் பிரிட்டன் அரசு மற்ற நாடுகளின் போட்டியை சமாளிக்க உள்நாட்டில் ஒரு எலக்ட்ரிக் வாகன பேட்டரி தொழிற்சாலையை பெற சமீப காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்காக, டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தாமல் பிரிட்டன் அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்க வாய்ப்பில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் காரணத்தினால்தான் இரு தரப்பினரும் இதற்கு தங்களது கருத்துகளை தெரிவிக்க மறுக்கின்றனர்.
அமெரிக்கா பின்பற்றிவரும் பணவீக்க குறைப்பு சட்டத்தை பிரிட்டன் அரசும் பின்பற்ற யோசித்து வருகிறது. இந்த சட்டத்தின்படி, பசுமையான போக்குவரத்தை கொண்டுவர எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். மானியங்களாக பல பில்லியன் டாலர்கள் செலவாகும். நமது இந்திய அரசு கூட இவ்வாறு எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பெரிய தொகையை மானியங்களாக வழங்கி வருகிறது.

பிரிட்டன் அரசு இத்தகைய சட்டத்தை பின்பற்றும் முனைப்பில் இருந்தாலும், பிரிட்டன் பொருளாதார அமைச்சர் ஜேரேமி ஹண்ட் அரசாங்கத்திடம் இவ்வளவு அதிக பணம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால், டாடா குழுமம் நிறுவ உள்ள பேட்டரி தொழிற்சாலை பிரிட்டன் அரசுக்கு ஒரு வழியில் பணத்தை மிச்சப்படுத்தக்கூடியதாக விளங்கும்.
அதாவது, உள்நாட்டில் பேட்டரி தொழிற்சாலை வருவதால், பிரேக்ஸிட் வர்த்தக விதிமுறைகளுக்கு இணக்கமானதாக பிரிட்டன் நாடு வந்துவிடும். இதன் மூலமாக, மற்ற எலக்ட்ரிக் வாகன பாகங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் மூலாதாரங்களை பிரிட்டன் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெறும். இதனால் 2024ஆம் ஆண்டில் இருந்து யுகே-இயூ வர்த்தகத்தில் செலுத்த வேண்டிய கட்டணங்களை பிரிட்டன் அரசு தவிர்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பிரிட்டன் அரசுக்கே உதவ உள்ளது என்றால், டாடா குழுமம் உலகளவில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை உணர முடிகிறது. ஆனால் மறந்துவிட வேண்டாம், யுகே-இல் லேண்ட்-ரோவர் மற்றும் ஜாகுவார் பிராண்ட்களின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளையே டாடா குழுமம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. டாடா குழுமத்தின் கீழ் தான் இந்த பிரிட்டிஷ் கார் பிராண்ட்கள் செயல்படுகின்றன.


Click it and Unblock the Notifications









