ஏர் இந்தியாவை வாங்கிய மூன்றே வருடங்களில் பெரிய செலவு! டாடா நிறுவனத்துக்கு நேரம் சுத்தி சுத்தி அடிக்குது!
ஏர் இந்தியா (Air India) விமானம் அகமதாபாத்தில் விமான நிலையத்தில் இருந்து டேக்-ஆஃப் (Take-off) செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியிருப்பது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனுக்கு புறப்பட்ட போயிங் (Boing) நிறுவனம் உருவாக்கிய இந்த விமானத்தில் சம்பவத்தின்போது பயணித்த 242 நபர்களில் வெறும் ஒரே ஒருவர் மட்டுமே விமானியின் 'மே டே' (May Day) எச்சரிக்கையை கேட்ட உடன் அவசர கால வெளியேறும் பகுதி வழியாக கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.
2 விமானிகள், 10 விமான பணியாளர்கள் உள்பட மற்றவர்கள் அனைவரும் விமானம் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீப்பிழம்பில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், 70க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர் ஆவர். மேலும், இந்த விமான விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானி அவர்களும் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலண்டனுக்கு செல்லக்கூடிய விமானமான இதில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் பிழைப்பை தேடி சென்றவர்களும், அந்த நாட்டில் குடிபெயர்ந்தவர்களும், அதேபோல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்தவர்களும் அதிகமாக இருந்துள்ளனர். இவர்களது குடும்பத்தினருக்கு விமான விபத்து பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியாவை நிர்வகிக்கும் டாடா குழுமம் (Tata Group) இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க போவதாக அறிவித்துள்ளது.
டாடா குழுமத்தை பற்றி உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்தியாவின் மிக பெரும் தனியார் நிறுவனங்களுள் ஒன்று. ஆட்டோமொபைல் (Automobile), இன்ஸ்சூரன்ஸ், உணவுகள், அழகு சாதனங்கள், மருத்துவ துறை என டாடா குழுமம் கால் பதிக்காத துறையே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையில் 'டாடா மோட்டார்ஸ்' (Tata Motors) என்கிற பெயரில் 1950ஆம் காலக்கட்டத்தில் இருந்தே டாடா க்ரூப் செயல்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில், கனரக லாரிகள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்துவந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 1990ஆம் காலக்கட்டத்தில் மிகுந்த ஆலோசனைகளுக்கு பிறகு கார்கள் வணிகத்தில் இறங்கியது. தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் டாடா மோட்டார்ஸ் ஒன்றாகும். இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது.
இத்தகைய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், இன்னும் பல நிறுவனங்களை கட்டி ஆளும் டாடா க்ரூப், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியை இழப்பீடாக வழங்க போவதாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டை சேர்ந்த சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராக பணியில் அமர்த்தப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தலைவர் சந்திரசேகரன் அறிவித்ததாக டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியும், விபத்தினால் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவையும் டாடா க்ரூப் ஏற்க உள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணத்தவர்கள் மட்டுமின்றி, விமானம் விழுந்த கட்டிடத்திற்கு உள்ளே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.
அவர்களது மருத்துவ செலவை ஏற்பதுடன், விமானம் விழுந்ததில் சேதமடைந்த கல்லூரி விடுதியையும் கட்டி தர உதவுவோம் என்றும், இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் இருக்கிறோம் என்றும் டாடா க்ரூப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டு, பின்னர் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு, பின்னர் 2022இல் மீண்டும் டாடா குழுமத்திடமே வந்ததுதான் ஏர் இந்தியா ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உடனடியாக இழப்பீட்டை டாடா க்ரூப் அறிவித்துள்ளது. இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. விமானத்தை முறையாக பராமரிக்காததுதான் விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. மத்திய அரசாங்கத்தால் சரிவர பராமரிக்க முடியாததினால்தான் ஏர் இந்தியாவை மீண்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமே வழங்கியது. அப்படியிருந்தும் இந்த விபத்து நடந்திருப்பது பல வித கேள்விகளை எழுப்புகிறது.


Click it and Unblock the Notifications









