கர்நாடகாவில் துப்பாக்கி தொழிற்சாலை!! மொத்தம் ரூ.2,330 கோடி முதலீடு - டாடா உடன் கர்நாடக முதல்வர்!
ஏர் இந்தியா (Air India) மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனங்கள் நம் தென்னிந்திய மாநிலம் ஒன்றில் அதிரடியாக சுமார் ரூ.2,300 கோடியை முதலீடு செய்கின்றன. எதற்காக இந்த பெரிய முதலீடு என்பதையும், எந்த மாநிலத்தில் இந்த நிறுவனங்கள் இந்த தொகையை முதலீடு செய்கின்றன என்பதையும் பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஏர் இந்தியா, இந்தியாவின் முன்னணி ஏர்லைன் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமாக விளங்கும் ஏர் இந்தியா ஆனது டாடா குழுமத்தின் ஓர் அங்கமாகவே செயல்படுவது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இந்த நிலையில், டாடா குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் சமீபத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவை நேரில் சந்தித்துள்ளனர்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த சந்திப்பின்போது, கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீலும் உடன் இருந்தார். சுமார் ரூ.2,330 கோடி முதலீட்டில் கையெழுத்தாகி உள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஒட்டுமொத்தமாக கர்நாடகா மாநிலத்தில் புதியதாக 1,650 வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி முக்கியமாக, கர்நாடகா மாநிலத்தில் MRO எனப்படும் விமானங்கள் பராமரிப்பு, பழுதுப்பார்ப்பு & மறுசீரமைப்பு தொழிற்சாலை ஏர் இந்தியா சார்பில் நிறுவப்பட உள்ளது. ரூ.1,300 கோடி முதலீட்டில் எழுப்பப்பட உள்ள இந்த புதிய ஏர் இந்தியா தொழிற்சாலையின் மூலமாக ஏறக்குறைய 1,200 வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.

1,650 வேலை வாய்ப்புகள் என்பது நேரடியாக உருவாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகும். அதுவே, மறைமுகமாக உருவாகும் வேலை வாய்ப்புகளையும் சேர்த்தால், சுமார் ஏறக்குறைய 26,000 வேலைவாய்ப்புகளை டாடா குழுமத்துடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் கர்நாடக அரசு உருவாக்க உள்ளது. இவ்வாறு, மாநில அரசுக்கு ஒருபக்கம் நன்மை என்றால், மறுபக்கம் ஏர் இந்தியாவுக்கும் நன்மை தரும் வகையில் இந்த புதிய ஒப்பந்தம் அமைந்துள்ளது.
அதாவது, பெங்களூரை தென்னிந்தியாவில் தனது முதல் MRO மையமாக உருமாற்ற ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸை பொறுத்தவரையில், 3 திட்டங்களுக்காக ரூ.1,030 கோடியை முதலீடு செய்கிறது. டாடா குழுமத்தில் இருந்து விமானங்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கான தொழிற்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் உள்ளது.

இத்தகைய நிறுவனம் கர்நாடகாவில் முதலீடு செய்யவுள்ள 3 திட்டங்களில் ஒன்று, பயணிகள் விமானங்களை கார்கோ விமானங்களாக மாற்றும் தொழிற்சாலையை அமைப்பதாகும். இதற்காக ரூ.420 கோடியையும், துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலைக்காக ரூ.310 கோடியையும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் முதலீடு செய்கிறது. இவை மட்டுமின்றி, ரூ.300 கோடியில் விமானங்கள் & பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் குறித்த ஆய்வு மற்றும் மேம்பாடு பணிகளை மேற்கொள்ள மையங்களையும் கர்நாடகாவில் இந்த டாடா நிறுவனம் அமைக்க உள்ளது.
இந்த 3 திட்டங்கள் மூலமாக ஏறக்குறைய 450 வேலை வாய்ப்புகள் உருவாகும் என டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் கணித்து வைத்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கும் துப்பாக்கிகளை செய்ய 13,000 பாகங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்களை கர்நாடகா மாநிலத்திற்குள் இருந்து பெற டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்த உலகமே தொழிற்நுட்பங்களை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதால், இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரில் கார்ப்பிரேட் கம்பெனிகள் குவிக்கின்றன. வட இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை மைய தளமாக கொண்டு செயல்படும் ஏர் இந்தியா தென்னிந்தியாவில் பெங்களூரை தேர்வு செய்துள்ளது. இதற்கேற்றவாறு, டாடா அட்வான்ஸ்டு கஸ்டம்ஸ் நிறுவனமும் ஆராய்ச்சி & உற்பத்தி என அனைத்தையும் கர்நாடகாவில் இறக்குகிறது.


Click it and Unblock the Notifications









