130 கிமீ வேகத்தில் மரத்தில் மோதிய கார்! இவங்க வண்டி இந்த அளவுக்கு பாதுகாப்பானதா! எல்லாருமே தப்பிச்சுட்டாங்க!
இந்தியாவில் சாலைகளின் தரம் தொடர்ச்சியாக மேம்பட்டு கொண்டே வருகிறது. இதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் மெனக்கெட்டு வருகின்றன. எனினும் ஆடு, மாடு மற்றும் நாய் போன்ற கால்நடைகள் திடீரென குறுக்கே வருவதால், ஏராளமான சாலை விபத்துக்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளன.
இந்த சூழலில் கால்நடை ஒன்று திடீரென குறுக்கே வந்த காரணத்தால், புத்தம் புதிய டாடா ஹாரியர் (Tata Harrier) கார் ஒன்று, விபத்தில் சிக்கிய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ (Video) தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்த வீடியோவில் பகிரப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி பார்த்தால், குஜராத் மாநிலத்தில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த டாடா ஹாரியர் கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், பசு ஒன்று திடீரென குறுக்கே வந்துள்ளது.
மணிக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த டாடா கார் ஹாரியர் கார் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு வேகத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், பசுவை கண்டதும், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் காரை திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமாக இருந்த மரத்தில் மோதியது.
இதன் காரணமாக டாடா ஹாரியர் காரின் முன் பகுதி நொறுங்கி விட்டது. முன் பக்க பம்பர், பானெட், க்ரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் ரேடியேட்டர் உள்ளிட்ட பாகங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. எனினும் சரியான நேரத்தில் ஏர்பேக்குகள் விரிவடைந்து, உள்ளே இருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன.
விபத்து நடைபெற்றபோது, காருக்கு உள்ளே எத்தனை பேர் இருந்தனர்? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் காருக்கு உள்ளே இருந்த அனைத்து பயணிகளும் தப்பி விட்டதாக இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றுவது இது முதல் முறையல்ல.
டாடா டியாகோ (Tata Tiago), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) உள்ளிட்ட கார்கள், கடந்த காலங்களில் பலமுறை சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன என்பதை இங்கே நினைவு கூற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இதில், டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியவை ஆகும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார்கள் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். கால்நடைகள் திடீரென குறுக்கே வரலாம் என்பதால், முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். செல்போனில் பேசி கொண்டே கார் ஓட்டுவது போன்ற விஷயங்களை எக்காரணத்தை கொண்டும் செய்ய கூடாது. அத்துடன் வேக வரம்புகளை பின்பற்றுவதும் அவசியம். மெதுவாக சென்றிருந்தால், இந்த விபத்தே நடைபெற்றிருக்காது.


Click it and Unblock the Notifications








