இவ்ளோ நாளா தப்பா நெனச்சுட்டோம்! பாறையே விழுந்தும் ஒன்னும் ஆகல! இந்த காரை கண்ணை மூடிட்டு வாங்கலாம்!
இந்தியாவில் பருவ மழைக்காலம் தொடங்கி விட்டது. இதன் காரணமாக மலை பகுதிகளில் நிலச்சரிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டுள்ளன. நிலச்சரிவுகள் மிகவும் ஆபத்தானவை. இந்த சூழலில் நிலச்சரிவுகளின் அபாயத்தை விளக்கும் வீடியோ (Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
நாகலாந்து மாநிலம் திம்மாபூர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பல்வேறு வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. அப்போது பெரிய பாறை ஒன்று உருண்டு, அங்கு நின்று கொண்டிருந்த டாடா ஹாரியர் (Tata Harrier) மீது விழுந்துள்ளது. இதில் டாடா ஹாரியர் காரின் பின் பகுதி நொறுங்கி விட்டது.

இருப்பினும் டாடா ஹாரியர் காரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக வெளியே வந்து விட்டனர். டாடா ஹாரியர் காரில் 5 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 5 பேரும் பத்திரமாக வெளியே வந்து விட்டனர். இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். இவ்வளவு பெரிய பாறை உருண்டு விழுந்துள்ள போதிலும், பயணிகள் அனைவரும் தப்பியிருப்பது, டாடா ஹாரியர் காரின் கட்டுமான தரத்தை காட்டுகிறது.
இமயமலை பகுதிகளில் மழைக்காலங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒரு விஷயம்தான். எனவே வாகனங்களில் பயணம் செய்யும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக சிறிய அளவிலான கற்கள் உருண்டு வருவதுடன்தான் நிலச்சரிவுகள் தொடங்கும். அதன் பிறகு பெரிய அளவிலான பாறைகள் உருண்டு விழுகும்.

எனவே இதை உணர்ந்து கொண்டு, நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதை அரசு ஏற்கனவே கண்டறிந்து, எச்சரிக்கை பலகைகள் வைத்திருக்கும். வாகன ஓட்டிகள் அதை தெளிவாக பார்த்து வாகனங்களை இயக்குவதும் அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேலான விஷயம் என்னவென்றால், நிலச்சரிவுகள் ஏற்படுவதை யாராலும் கணிக்கவே முடியாது. எனவே மழைக்காலங்களில், மலை பகுதிகளில் பயணம் செய்வதை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக சுற்றுலா போன்ற விஷயங்களை மழைக்காலங்களில், மலை பகுதிகளில் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
நாகலாந்து மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தை பொறுத்தவரையில், டாடா ஹாரியர் காரின் வலுவான கட்டுமான தரத்தால் அனைவரும் தப்பி விட்டனர். பொதுவாக டாடா நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பானவை. அதன் பல்வேறு கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.
டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகியவைதான் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்கள். அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இன்னும் பல்வேறு கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன.
ஆனால் டாடா ஹாரியர் காரின் குளோபல் என்சிஏபி பாதுகாப்பு ரேட்டிங் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. எனவே இது பாதுகாப்பு குறைவான காரோ? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், டாடா ஹாரியர் காரை குளோபல் என்சிஏபி இன்னும் மோதல் சோதனைக்கே உட்படுத்தவில்லை. எனவேதான் டாடா ஹாரியர் கார் இன்னும் பாதுகாப்பு ரேட்டிங் இல்லாமல் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குளோபல் என்சிஏபி அமைப்பின் பாதுகாப்பு ரேட்டிங் இல்லாவிட்டாலும் கூட, டாடா ஹாரியர் கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பதை இந்த விபத்து நமக்கு நன்றாக உணர்த்தி விட்டது. ஆனால் கொடூரமான விபத்து ஒன்றில் இருந்து டாடா ஹாரியர் கார் பயணிகளை காப்பாற்றுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் நிறைய விபத்துக்களில் டாடா ஹாரியர் காரின் கட்டுமான தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








