டாடா ஹாரியர் EV காரில் தொடர் கோளாறு... உரிமையாளருக்கு ரூ.23.98 லட்சம் திருப்பி தர டீலருக்கு உத்தரவு!
புதிதாக வாங்கிய டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாகனத்தை திரும்பப் பெற்று பணத்தைத் திருப்பி வழங்குமாறு சம்பந்தப்பட்ட டீலருக்கு உத்தரவிட்டுள்ளது. ரூ.28 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட அந்த டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் கார் தொடர்பான இந்த வழக்கில், 10 சதவீத தேய்மானத்தை கழித்த பிறகு சுமார் ரூ.23.98 லட்சத்தை உரிமையாளருக்கு திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ரெஃப்ரிஜிரேஷன் எக்கியூப்மென்ட் அண்ட் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2025 ஆகஸ்ட் 1ம் தேதி டாடா ஹாரியர் எலெக்ட்ரிக் காரின் Empowered 75 kWh என்ற வேரியண்ட்டை ரூ.27.98 லட்சத்துக்கு வாங்கி உள்ளது. கார் வாங்கிய சில நாட்களிலேயே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

(Representational Image)
குறிப்பாக, காரை ஸ்டார்ட் செய்வதில் சிக்கல், ஸ்மார்ட் கீயை கார் அடையாளம் காணாதது, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் சரியாக இயங்காதது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் கார் சாலையில் செல்லும்போதே நின்றுவிட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த தொடர் பிரச்னைகளை சரிசெய்வதற்காக சம்பந்தப்பட்ட டீலரின் சர்வீஸ் சென்டருக்கு பலமுறை கார் கொண்டு செல்லப்பட்டது. ஆரம்பத்தில் ஏற்பட்ட சில கோளாறுகள் மென்பொருள் தொடர்புடையது என டீலர் சார்பில் தெரிவிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டதாக சர்வீஸ் சென்டரில் கூறி உள்ளனர். பின்னர் தேவையான மென்பொருள் அப்டேட் மற்றும் சில உதிரிபாகங்களை மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக டீலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சர்வீஸ் செய்த பிறகும் அதே பிரச்னைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹைதராபாத் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உரிமையாளர் புகார் அளித்தார். இதற்கு ஆதாரமாக சர்வீஸ் ஹிஸ்டரி மற்றும் ஜாப் கார்டு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒரே மாதிரியான புகார்கள் பல்வேறு தேதிகளில் பதிவாகியிருந்ததை நுகர்வோர் ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, காரில் உற்பத்திக் குறைபாடு இருப்பதை நிரூபிக்க தேவையான நிபுணர் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், தாங்கள் வெறும் அங்கீகரிக்கப்பட்ட டீலர் மற்றும் சர்வீஸ் சென்டர் மட்டுமே என்றும் டீலர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வாகன உற்பத்தியாளர் இந்த வழக்கில் தரப்பாக சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், தொடர்ந்து பதிவான சர்வீஸ் புகார்கள் மற்றும் ஜாப் கார்டுகளை ஆய்வு செய்த ஆணையம், பிரச்னைகள் முழுமையாக சரிசெய்யப்படாமல் தொடர்ந்துள்ளதை கவனத்தில் கொள்வதாக குறிப்பிட்டது. குறைகள் சரிசெய்யாமல் டீலரின் சேவையில் குறைபாடு இருப்பதாக ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து, வாகனத்தை திரும்பப் பெற்று, 10 சதவீத தேய்மானத்தைக் கழித்த பிறகு ரூ.23.98 லட்சத்தை உரிமையாளருக்கு திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும், ரூ.50,000 இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ.15,000 வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால் ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் எதிரியாக டீலர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தயாரிப்பு நிறுவனம் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. எனினும், இதுதொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கு டீலருக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: The Indian Express


Click it and Unblock the Notifications


