கூகுள் மேப் பார்த்து சென்று காட்டிற்குள் சிக்கி கொண்ட குடும்பம்! நடந்ததை கேட்கும்போதே திகிலா இருக்கு
கூகுள் மேப் பார்த்து காரில் பயணித்த குடும்பத்தினர், காட்டிற்குள் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடைவதற்கு கூகுள் மேப் இன்று பெரிதும் உதவி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில சமயங்களில் கூகுள் மேப்பை கண் மூடித்தனமாக நம்புவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதற்கு உதாரணமாக இந்தியாவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற சிலர் வழி தவறி ஆபத்தில் சிக்கி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் இந்தியாவில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் திகில் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, டீம்-பிஎச்பி தளத்தில், சிசிர்333 என்ற பயனர் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவம் இந்த பயனருக்கு நிகழவில்லை. அவரது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நடந்துள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்த பயனரின் நண்பர் ஒருவரிடம் டாடா ஹாரியர் கார் உள்ளது. சம்பவத்தன்று அவர் தனது பெற்றோர்கள் உடன் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். புனேவில் இருந்து ஜபல்பூர் சுமார் 1,000 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இப்படி ஒரு நீண்ட தொலைவை டாடா ஹாரியர் உரிமையாளர் பயணிப்பது அதுவே முதல் முறை.

போதாக்குறைக்கு அவர் இதற்கு முழுமையாக தயார் ஆகவும் இல்லை. அவருக்கு வழி தெரியாது. இருந்தாலும் கூகுள் மேப் உதவியுடன் சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் காலை 9 மணிக்கு புனேவில் இருந்து அவர் பயணத்தை தொடங்கினார். அன்றைய தினம் இரவு நாக்பூரில் தங்கி விடலாம் என அவர் திட்டமிட்டார். புனேவில் இருந்து நாக்பூர் சுமார் 700 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

இரவு சுமார் 11 மணியளவில் நாக்பூரை அடையலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது. இதனிடையே அமராவதி என்ற இடத்திற்கு அருகே வந்தபோது மெயின் ரோட்டில் இருந்து கூகுள் மேப் டைவர்ஸன் காட்டியுள்ளது. எதை பற்றியும் யோசிக்காமல், டாடா ஹாரியர் காரின் உரிமையாளர் அந்த பாதையில் பயணிக்க தொடங்கி விட்டார்.

அந்த பாதை மிகவும் குறுகலாகவும், இருள் சூழ்ந்தும் இருந்தது. அத்துடன் பாதை நன்றாகவும் இல்லை. ஆனால் கூகுள் மேப் மீது வைத்த நம்பிக்கையில், டாடா ஹாரியர் காரின் உரிமையாளர் தொடர்ந்து அதே பாதையில் தொடர்ந்து பயணித்தார். அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரத்தில் 20 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த பிறகு, சிற்றோடை ஒன்று வந்துள்ளது. அங்கு இருந்த பாலம் உடைந்த நிலையில் காணப்பட்டது.

பாலம் மோசமான நிலையில் இருந்தாலும், அதன் இடது பக்கத்தில் பாதை இருந்தது. ஹாரியர் காரால் அந்த பாதையை கடக்க முடியும் என அதன் உரிமையாளர் நினைத்தார். ஆனால் சிற்றோடையின் கரையை ஒட்டி அவர் பயணம் செய்தபோது கரடுமுரடான நிலப்பரப்பில் கார் சிக்கி கொண்டது. சுமார் அரை மணி நேரம் முயற்சி செய்தும், ஆழமான மண்ணில் சிக்கி கொண்ட காரை அவரால் வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த சமயத்தில் இன்ஜினில் இருந்து புகை வெளியேறுவதை அவர் கண்டார். அத்துடன் எரியும் வாசனையும் வந்துள்ளது. போதாக்குறைக்கு ஹெட்லேம்ப்களும் வேலை செய்வதை நிறுத்தி விட்டன. எனவே வேறு வழி இல்லாமல், நள்ளிரவு 2.30 மணியளவில் மெக்கானிக்குகளை அவர் அழைத்தார். அவர்கள் 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, ஒன்றரை மணி நேரத்திற்கு பின் அங்கு வந்து காரை மீட்டனர்.

கூகுள் மேப் பயன்படுத்துபவர்கள் மத்தியில், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர பகுதிகளில் தினசரி பயன்பாட்டிற்கு கூகுள் மேப் பயன்படுத்துவதில் பெரும்பாலும் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது, கூகுள் மேப்பை கண்மூடித்தனமாக நம்புவது ஆபத்தானதுதான்.

தொலை தூர பயணங்களை தொடங்கும் முன்பு, ஏற்கனவே நன்கு அனுபவம் உள்ளவர்களிடம் வழியை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. அதேபோல் தொலை தூர பயணங்களின்போது கூகுள் மேப் பயன்படுத்தினால், பாதையை ஒரு முறைக்கு இரு முறை சோதித்து கொள்வதும் சிறந்தது. தவறான பாதை என உங்கள் உள்ளுணர்விற்கு சந்தேகம் ஏற்பட்டால், சோதித்து கொள்வதில் தவறில்லை.


Click it and Unblock the Notifications








