தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொட்டும் டாடா!! முதலமைச்சரின் மற்றொரு சிக்ஸ்... முதலீடுகள் குவியுது
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நம் தமிழ்நாட்டில் நன்கு வலுவாக காலூன்ற தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் டாடாவின் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இதன் துவக்கமாக, தமிழ்நாட்டில் டாடா தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் சூடான நகரங்களுள் ஒன்றான ராணிப்பேட்டையில் இந்த தொழிற்சாலை அமைகிறது. இதற்காக டாடா மோட்டார்ஸ் முதலீடு செய்ய உள்ள தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸை சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்துக் கொண்டிருக்கிறது. கார்கள் மட்டுமின்றி, லாரி, பேருந்து உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களும் டாடாவில் இருந்து விற்பனை செய்யப்படுவது நம் எல்லாருக்கும் தெரிந்ததே.

அதேபோல், டாடா குழுமத்தின் கீழ் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. தற்போது தமிழ்நாட்டில் அமைக்கப்படும் தொழிற்சாலை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களையும் உற்பத்தி செய்வதற்குதான். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் நடைபெற்ற புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் டாடா சன்ஸ் & டாடா மோட்டார்ஸின் தலைவர் என் சந்திரசேகரன் தலைமை தாங்கினர்.
மேலும், தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், டாடா க்ரூப்பின் அதிகாரிகள், டாடா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், முதலைமைச்சர் மற்றும் டாடாவின் தலைவர் உள்பட முக்கிய நிர்வாகிகள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை மண்தூவி ஆரம்பித்து வைத்தனர். இந்திய அளவில் மட்டுமில்லாமல், இந்த புதிய தொழிற்சாலையை உலகளவிலான வணிகங்களுக்கு பயன்படுத்த டாடா க்ரூப் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், அடுத்த தலைமுறை டாடா வாகனங்கள் மட்டுமின்றி, ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக டாடாவின் இந்த புதிய ராணிப்பேட்டை தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையை நிறுவுவதற்காக மட்டும் ரூ.9,000 கோடியை டாடா க்ரூப் முதலீடு செய்ய உள்ளது.
தொழிற்சாலை கட்டி முடிக்க, முடிக்க ஒவ்வொரு பிரிவாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, ஒரு கட்டத்திற்கு மேல் டாடா திட்டமிட்ட தொழிற்சாலை முழுவதுமாக பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கு இன்னும் 5 முதல் 7 வருடங்கள் வரையில் ஆகலாம் என டாடா க்ரூப் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொழிற்சாலை வருவதால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் டாடா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறது.

முழுக்க முழுக்க 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்த புதிய டாடா தொழிற்சாலை செயல்பட உள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகளை சமீபத்தில்தான் டாடா க்ரூப் துவங்கியது. அதாவது, வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு இந்த ரேஞ்ச் ரோவர் கார்கள் இந்தியாவில் ஒரு முழு காராக உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
வெளிநாட்டில் இருந்து முழு காராக கொண்டுவராமல், இவ்வாறு கொண்டுவரப் படுவதால் இறக்குமதி வரி குறைந்துள்ளது. இதனால், ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் குறைந்துள்ளன; விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த ரேஞ்ச் ரோவர் கார்களின் அசெம்பிள் பணிகள் புதிய ராணிப்பேட்டை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படலாம். ஏனெனில், சென்னை துறைமுகத்திற்கும் ராணிப்பேட்டைக்கும் அதிக தொலைவு இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா க்ரூப் சமீப காலங்களில் அசூர வளர்ச்சி கண்டுள்ளது. சமீபத்தில்தான், இந்தியாவில் ஃபோர்டு மோட்டார்ஸின் தொழிற்சாலையை வாங்கி, தனது உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவ ஆயத்தமாகி வருகிறது. வட இந்தியாவில் ஏற்கனவே நன்கு வலுவாக காலூன்றிவிட்ட டாடா க்ரூப் இந்த புதிய தொழிற்சாலை மூலம் தென்னிந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications









