பழைய காரை மெயின்டெயின் பண்ணிக்கிட்டு கஷ்டப்படாதீங்க!! டாடா மோட்டார்ஸ் கிட்ட கொடுத்தால் நல்ல அமௌண்ட் கிடைக்கும்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் டெல்லியில் அதன் புதிய வாகன அழிப்பு (Vehicle Scrapping) தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இந்தியாவில் ஒரு முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் துவங்கியுள்ள 5வது வைகல் ஸ்க்ராப்பிங் தொழிற்சாலையான இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் பலர் விரும்பி வாங்கும் கார் பிராண்டாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. கடந்த 2024 பிப்ரவரி மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தை முந்தி, கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிடித்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் மாருதி கார்களுக்கு அடுத்து டாடா கார்கள் அதிக பேரால் வாங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் 5வது வைகல் ஸ்க்ராப்பிங் தொழிற்சாலையை டெல்லியில் திறந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் செயல்பாட்டு இயக்குனரான கிரிஷ் வாக் திறந்து வைத்துள்ள இந்த தொழிற்சாலைக்கு 'ரீ-சைக்கிள் வித் ரெஸ்பெக்ட்' (Recycle with Respect) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக இதனை 'Re.Wi.Re' என அழைக்கின்றனர்.
பசுமையான சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத வகையில் செயல்படும் என டாடா மோட்டார்ஸ் சான்றிதழ் கொடுக்கும் இந்த புதிய ஸ்க்ராப்பிங் தொழிற்சாலையில் வருடத்திற்கு பாதுகாப்பான முறையில் 18,000 வாகனங்களை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாடாவின் இந்த புதிய தொழிற்சாலையில் கார்களுடன் லாரி, பேருந்துகள் போன்ற கமர்ஷியல் வாகனங்களையும் அழிக்க முடியுமாம்.
அதேபோல், இந்த தொழிற்சாலையில் டாடா வாகனங்கள் தான் அழிக்கப்படும் என்றில்லை. எல்லா விதமான பிராண்ட்களின் வாகனங்களும் முறையாக & பாதுகாப்பாக அழிக்கப்படும். ஜோஹர் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த வைகல் ஸ்க்ராப்பிங் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவி உள்ளது. இதேபோன்று, ஜெய்பூர், புவனேஷ்வர், சூரத் மற்றும் சண்டிகரிலும் டாடாவின் வைகல் ஸ்க்ராப்பிங் தொழிற்சாலை உள்ளது.
முழுவதும் டிஜிட்டல் தரத்தில் உள்ள டாடாவின் இந்த டெல்லி வைகல் ஸ்க்ராப்பிங் தொழிற்சாலையில் கமர்ஷியல் வாகனங்களை அழிப்பதற்காக செல்-டைப் பகுதியும், கார் & ஆட்டோ போன்ற பயணிகள் வாகனங்களை அழிப்பதற்காக லைன்-டைப் பகுதியும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இந்த தொழிற்சாலை முழுவதுமாக டிஜிட்டலாக உள்ளதால், அனைத்து செயல்பாடுகளும் காகிதங்கள் இல்லாமல் ஆன்லைன் வாயிலாக நடக்கும்.

டயர்கள், பேட்டரிகள், எரிபொருள், ஆயில், திரவங்கள் மற்றும் வாயுக்களை பிரித்தெடுப்பதற்காக வாகனங்கள் இந்த தொழிற்சாலைக்குள் ஒவ்வொரு நிலையத்துக்கும் கொண்டு செல்லப்படும். வாகனங்கள் ஏன் அழிக்கப்பட வேண்டும் என இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். குறிப்பிட்ட வயதை எட்டிய வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் அழிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
இதற்காக, 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வைகல் ஸ்க்ராப்பேஜ் பாலிசி மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. 20 வருடங்களுக்கு மேலான பழமையான கமர்ஷியல் வாகனங்களும், 15 வருடங்களுக்கு மேலான கார்களும் அழிக்கப்பட வேண்டும் என இந்த பாலிசி கூறுகிறது. இந்த பாலிசியில் கூறப்பட்டுள்ளப்படி, டாடாவின் இந்த புதிய தொழிற்சாலை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வாகனங்களை காட்டிலும் பழைய வாகனங்கள் அதிக மாசுவை உமிழ்வதாக ஆய்வு முடிவுகள் வெளியானதை அடுத்து இவ்வாறான ஒரு திட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்தது. அரசாங்கத்தின் மற்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்ததுபோல், வைகல் ஸ்க்ராப்பிங் திட்டத்திற்கும் டாடா மோட்டார்ஸ் தனது முழு ஆதரவை கொடுத்து வருகிறது. இதன் விளைவாகவே, குறுகிய காலத்தில் 5 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications








