டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஊழியர்கள் திடீர் போர்க்கொடி!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அது குறித்த தகவல்களை காணலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு குஜராஜ் மாநிலம் அகமதாபாத் அருகேயுள்ள 'சனந்' எனும் நகரில், கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் இந்தியாவின் விலை மலிவான கார்கள் என்று அழைக்கப்படும் 'நானோ' கார்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு தொடர்பாக நிர்வாகத்துடன் பிரச்சனை இருந்து வருகிறது.

டாடா நிறுவனத்தின் சனந் தொழிற்சாலையில், 250 நிரந்தர ஊழியர்களும், 3000 தற்காலிக ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊதிய உயர்வு மற்றும் சில அம்சகோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்கு ஊழியர்கள் ஒரு மாதம்
வேலை புறக்கணிப்பு நடத்தினர்.

பின்னர், தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்தினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அப்போது போராட்டத்த கைவிட்டனர். அதன்பிறகும் டாடா நிர்வாகத்திடம் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் ஊழியர்கள்.

இந்நிலையில், ஒரு வருடமாகியும் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத நிர்வாகத்தின் மீதிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்த
எண்ணிய 200 தொழிலாலர்கள், முதல் ஷிஃப்ட் முடிந்து நிறுவன பேருந்துகளில் ஏற மறுத்து நடந்தே வெளியேற முயற்சித்துள்ளனர்.

வெளியே சென்று போராட்டத்தில் ஈடுபடுவர் எனக்கருதிய டாடா நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் அதிகாரப்போக்குடன் செயல்பட்டு அவர்களை பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின், ஊழியர் சம்மேளனத் தலைவர் ஹிதேஷ் ரபரி கூறுகையில், "ஊதிய உயர்வு கோரிக்கையை நிர்வாகத்திடம் நீண்டகாலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், அதை ஏற்காமல் அவர்களும் தொடர்ந்து காலந்தாழ்த்தி வருகின்றனர்"

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் ஊழியர்கள் சிலர் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவன பேருந்துகளை புறக்கணித்து எங்கள் வீடுகளுக்கு நடந்து செல்ல கூட அனுமதி மறுக்கின்றனர், 6 மாதங்களாக புதிய சீருடை அளிக்கப்படவில்லை, கேள்வி கேட்கும் ஊழியர்கள் மிரட்டப்படுகின்றனர் என நிர்வாகம் மீது அடுக்கடுக்கான புகார்களை மேலும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் சார்பில் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, ஊழியர்கள் சங்கம் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிகிறது.
டாடா அறிமுகப்படுத்தியுள்ள கைட்-5 காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்:


Click it and Unblock the Notifications








