இது கார் அல்ல... கடவுள்! டிரைவரின் அசட்டுதனத்தால் நடந்த சம்பவம்... உயிரை காப்பாற்றிய டாடா தயாரிப்பு
டிரைவரின் அலட்சியத்தால் நடைபெற்ற கொடூரமான விபத்து ஒன்றில் இருந்து, அவரின் உயிரை டாடா கார் காப்பாற்றியுள்ளது.

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே முக்கியமான காரணமாக உள்ளது.

அதே சமயம் விபத்துக்களில் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால், வாகனங்கள் பாதுகாப்பானதாக இருப்பது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட வாகனங்களை இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. டாடா நிறுவனத்தின் கார்களில், நெக்ஸான் மிகவும் பாதுகாப்பான வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இன் இந்தியா கார் டாடா நெக்ஸான்தான். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார்களில் ஒன்றாகவும் டாடா நெக்ஸான் திகழ்கிறது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். மிக சிறப்பான கட்டுமான தரத்தை டாடா நெக்ஸான் கொண்டுள்ளது.

இதன் மூலம் விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போதும் ஒரு கொடூரமான விபத்தில் இருந்து பயணியின் உயிரை டாடா நெக்ஸான் காப்பாற்றியுள்ளது.

கடவுளின் சொந்த தேசமான கேரளாவில் இந்த கோர விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தன்று டாடா நெக்ஸான் காரை அதன் டிரைவர் அதிவேகத்தில் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலை ஈரமாக வேறு இருந்துள்ளது. இதனால் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட, சாலையில் கார் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

இதன் உச்சகட்டம் என்னவென்றால், இன்ஜின் பே-வில் இருந்து இன்ஜின் எப்படியோ கழன்று சென்று, காரில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் விழுந்துள்ளது. இதன் மூலம் விபத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளலாம். எனினும் அதன் ஒரே பயணியான டிரைவரின் உயிரை டாடா நெக்ஸான் காப்பாற்றியுள்ளது. விபத்து நடைபெற்ற சமயத்தில் டிரைவர் மட்டுமே காரில் இருந்தார்.

அவரது உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. டாடா நெக்ஸான் கார் இதற்கு முன்பாகவும் இதுபோல் பல விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள விபத்து, டாடா நெக்ஸான் காரின் மிக சிறப்பான கட்டுமான தரத்தை உறுதி செய்வதாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது. இவை அனைத்தும் காருக்குள் இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. ஆனால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பது சுலபம்தான்.

வானிலை மோசமாகவும், சாலை மிகவும் ஈரப்பதமாகவும் இருந்த நிலையில் டிரைவர் அதிவேகத்தில் காரை ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலமும், கூடுதல் எச்சரிக்கையுடன் காரை ஓட்டுவதன் மூலமும், இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

Image Courtesy: Amul Naik/Rushlane Crashlane
குறிப்பாக வானிலை சாதகமாக இல்லாத சமயங்களில் காரை ஓட்டும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். டாடா நெக்ஸான் போலவே, டாடா அல்ட்ராஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் மிகவும் பாதுகாப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸானை தொடர்ந்து, இந்த 2 கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








