ரூ.22 ஆயிரத்தில் வேலையை முடிச்சிட்டு ஜாலியா இருக்கார்!! ஏரியா முழுக்க கரண்ட் போனாலும், எலக்ட்ரிக் கார் இருக்கு
எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலமாக சுற்றுச்சூழல் மாசடைவது பெரிய அளவில் தவிர்க்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், எலக்ட்ரிக் வாகன பிரியர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனாலேயே, எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு அரசாங்கம் சார்பில் மானியங்கள் வழங்கப்படுவதுடன், நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 72,000 பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
எலக்ட்ரிக் வாகனங்களினால் பல நன்மை உள்ளன. பசுமையான போக்குவரத்தை வழங்குவதுடன், எல்லா நேரமும் ஒரு நடமாடும் ஸ்விட்ச் பாக்ஸ் (Switch Box) ஆக எலக்ட்ரிக் வாகனங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களில் இருந்து தேவையான மின்சாரத்தை பெறுவது எளிமையானதாக மாறி வருகிறது.

இதனால், நடு வழியில் சார்ஜ் தேவைப்படும் எலக்ட்ரிக் காருக்கு தனது எலக்ட்ரிக் காரில் இருந்து சார்ஜை வழங்க முடிகிறது. இதனை வாகனம்-டூ-வாகனம் (V2V) என அழைக்கின்றனர். நீண்ட வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் மொபைல் போன்களில் கூட இந்த வசதி தற்போதுதான் மெல்ல மெல்ல பரவி வருகிறது. ஆனால் அதற்குள்ளாகவே எலக்ட்ரிக் கார்களில் இந்த வசதியை பலர் பரவலாக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.
எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றில் இருந்து மின்சாரத்தை இன்னொரு எலக்ட்ரிக் வாகனத்திற்கு வழங்குவது மட்டுமின்றி, அந்த மின்சாரத்தை கொண்டு வீட்டு உபயோக மின்சாதனங்களையும் பயன்படுத்தலாம் என்பது பல எலக்ட்ரிக் கார் ஓனர்களை ஆச்சிரியப்படுத்தி உள்ளது. வாகனம்-டூ-லோடு (V2L) என அழைக்கப்படும் இந்த வசதியின் மூலமாக, எங்கு வேண்டுமானாலும் மின்சாரத்தை பெறலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளதால் பலர் இந்த வசதியை விரும்பி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், தற்போதுள்ள எலக்ட்ரிக் கார்களின் மின்சாரத்தின் உதவியுடன் பெரிய அளவிலான மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. காஃபி போடும் இயந்திரம், மின்சார அடுப்பு, ரொட்டி சுடும் இயந்திரம் போன்ற சிறிய அளவிலான, குறைந்த மின்சாரத்தை கேட்கும் இயந்திரங்களை தான் பயன்படுத்த முடிகிறது. ஆனால், இங்கு ஒருவர் தனது டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலக்ட்ரிக் காரை மின்சார ஜெனரேட்டராக பயன்படுத்தி தனது மொத்த வீட்டிற்கும் மின்சாரத்தை கொடுத்துள்ளார்.
ஏரியாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சமயத்தில், எலக்ட்ரிக் கார் மூலமாக இந்த நபர் தனது வீட்டிற்கான மின்சாரத்தை பெற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, காரில் இருந்து வீட்டிற்கான மின்சாரத்தை பெறுவதற்கு எவ்வாறான வயரிங் செட்-அப் செய்யப்பட்டுள்ளது, எத்தகைய V2L அடாப்டர் (Adapter) பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் வீடியோவில் விளக்கி கூறியுள்ளனர்.
இவரது வீட்டில் ஏற்கனவே ஒரு ஜெனரேட்டர் உள்ளது. அதாவது, ஏரியாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் அந்த ஜெனரேட்டர் மூலமாக இவர் தனது வீட்டிற்கான மின்சாரத்தை பெறுகிறார். இருப்பினும், அந்த ஜெனரேட்டரிலும் மின்சாரம் தீர்ந்துப் போகும் சூழல் வந்தால் என்ன செய்வது என தனது எலக்ட்ரிக் காரில் இருந்து இவ்வாறான மின்சார ஜெனரேட்டர் செட்-அப்பை உருவாக்கி உள்ளார்.
மேலும், ஜெனரேட்டர்+ எலக்ட்ரிக் கார் என இரண்டின் உதவியுடன் ஒட்டுமொத்த வீட்டிற்கும் மின்சாரத்தை கொடுக்க முடியும். உள்ளூர் எலக்ட்ரிசியன் உதவியுடன் இந்த செட்-அப்பை உருவாக்குவதற்கு இந்த நபருக்கு ரூ.22 ஆயிரம் வரையில் செலவாகி உள்ளது. இது இல்லாமல், தனது நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் இருந்து V2L வசதியை பெறுவதற்காக டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப் ஷோரூமில் ரூ.5,000 செலுத்தி உள்ளதாகவும் இந்த நபர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: V2L வசதி ஆனது அனைத்து டாடா எலக்ட்ரிக் கார்களிலும் வழங்கப்படுவது இல்லை. நெக்ஸான் இவி மற்றும் கர்வ் இவி (Curvv EV) எலக்ட்ரிக் கார்களில் மட்டுமே தற்போதைக்கு வழங்கப்படுகின்றன. இந்த இரு எலக்ட்ரிக் கார்களிலும் கூட சில குறிப்பிட்ட வேரியண்ட்களில் மட்டுமே இந்த வசதி கொடுக்கப்படுகிறது. இவ்வாறான எலக்ட்ரிக் காரின் மின்சாரத்தை வேறு விஷயங்களாக பயன்படுத்துவதால், காரின் ரேஞ்ச் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








