டாடா நிறுவனத்துக்கு தான் நன்றி!! யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை - இன்னும் அதிர்ச்சியில் கார் டிரைவர்!!
டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் ஒன்று ஹை-ஸ்பீடில் ரோல்-ஓவர் செய்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இருப்பினும், காரில் பயணித்தவர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ள அதிசயம் நடந்துள்ளது. எங்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதையும், இந்த விபத்தை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
டாடா கார்கள் அவற்றின் தரமான வடிவமைப்பினால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானவைகளாக உள்ளன. இதன் காரணமாகவே நிறைய வாடிக்கையாளர்களும் டாடா கார்களுக்கு கிடைத்துள்ளனர். க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் சில டாடா கார்கள் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன.

அத்தகைய டாடா கார்களை வைத்திருப்போர் விபத்தில் சிக்க நேரும்போது, காரின் தரம் அவர்களை காப்பாற்றி உள்ளது. அவ்வாறு, டாடா காரின் உடல் வலிமையினால் உயிர் பிழைத்தவர்கள் அதன்பின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்றி கூறும் வீடியோக்களை பலமுறை இணையத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் மற்றுமொரு சம்பவத்தை பற்றியே இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிவேகத்தில் சென்ற டாடா நெக்ஸான் கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. பைகுந்த்புர் என்ற பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 43-இல் அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்த இந்த நீல நிற நெக்ஸான் கார் ஒரு கட்டத்தில் சாலையில் இருந்து விலகி ஆஃப்-ரோடுக்கு சென்றுள்ளது. அப்போது காரின் டயர்கள் சறுக்கல் அடைந்ததை அடுத்து, கார் பலமுறை ரோல்-ஓவர் அதாவது சகதியில் புரண்டது.

பின்னர் ஒரு கட்டத்தில் கார் ரோல்-ஓவர் ஆகுவது நின்றுள்ளது. மழைக்காலம் என்பதால், சாலைக்கு இரு பக்கங்களிலும் மண் ஈரமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி, ரோல்-ஓவர் செய்த கார் கடைசியாக நின்ற இடத்திற்கு அருகில் ஓர் சிறிய குட்டை போல் இருப்பதை கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். நல்ல வேளையாக, குட்டையில் கவிழ்வதற்கு முன் கார் ரோல்-ஓவர் ஆகுவது நின்றுள்ளது.
அதேபோல், நல்ல வேளையாக விபத்தின்போது வேறெந்த வாகனம் அல்லது பொருளுடன் இந்த கார் மோதவில்லை. இந்த விபத்தில் காருக்குள் இருந்த பயணிகள் எவரொருவருக்கும் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரின் கதவுகள், பொனெட், மேற்கூரை மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அதேபோல், காருக்கு முன் & பின்னால் இருந்த விண்ட்ஷீல்டுகள் உடைந்துள்ளன.

ரோல்-ஓவர் ஆன போதிலும், காரின் பில்லர்கள் நல்ல நிலையில் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இதுவே, காருக்குள் இருந்த பயணிகளை காப்பாற்றி உள்ளது என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில் காரின் கேபின் எந்த பாதிப்பையும் சந்திக்காமல் இருந்தாலே, பெரும்பாலும் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்பட வாய்ப்பில்லை. விபத்தில் கவிழ்ந்த நெக்ஸான் காரை ஓர் கிரேன் உதவியுடன் மீட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்துக்கு முக்கிய மற்றும் ஒரே காரணம் அதிவேகம் தான். அதிவேக பயணம் எப்போதுமே ஆபத்தானது என பலர் கூறினாலும், இவ்வாறான விபத்துகள் நடப்பது ஒரு பக்கம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. டாடா நெக்ஸான் போன்று வலிமையான கார்களை உருவாக்கும் அதேநேரம், இவ்வாறான ஹை-ஸ்பீடு பயணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









