ஒரு நிமிஷம் நாங்க அவ்ளோதான் காலினு நினைச்சோம், ஆனால்...!! நால்வரது உயிரை காப்பாற்றிய டாடா நெக்ஸான் காரின் தரம்
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவிற்கு நம் நாட்டில் நாள் தோறும் சாலை விபத்துகள் அரங்கேறி வருகின்றன. அதில் சிறு சிறு விபத்துகள் போலீஸாரால் பதிவு செய்யப்படாமலேயே முடிகின்றன.

ஆனால் சில விபத்துகள் நாடு முழுவதும் மக்களால் அறியப்படும் அளவிற்கு கோர சம்பவமாக அமைந்துவிடுகின்றன. இருப்பினும் இவ்வாறான கோர விபத்துகளில் டாடா நெக்ஸான் உரிமையாளர்கள் சிக்கி கொள்வது இல்லை என்கிற கருத்து பரவலாக உள்ளது. அதாவது மிக பெரிய விபத்துகளையும் டாடா தயாரிப்புகள் பெரியதாக எவருக்கும் பாதிப்பு இல்லாத அளவிற்கு சமாளித்துவிடுகின்றன.

இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளை இதற்குமுன் பார்த்துள்ளோம். அவ்வாறான ஒரு சம்பவம் தான் கேரளாவில் அரங்கேறியுள்ளது. நிகில் ராணா என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இதுதொடர்பான கீழுள்ள வீடியோவில் மேடான சாலையில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி செங்குத்தாக மோதி நிற்கும் வெள்ளை நிற டாடா நெக்ஸான் காரை காணலாம்.
மேலும் இந்த விபத்து எவ்வாறு நடைபெற்றது, விபத்து நடைபெறும்போது காருக்குள் எத்தனை பேர் பயணித்தனர் என்பதையும் தெளிவாக கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், இந்த வீடியோவில் விபத்தின் போது இந்த நெக்ஸான் காரில் இருந்த அதன் உரிமையாளரும் போன் தொடர்பின் மூலம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த டாடா நெக்ஸான் காரின் உரிமையாளரின் பெயர் விஷாக் என்.சி ஆகும். இந்த சம்பவம் நடைபெற்ற போது விஷாக்கும், அவரது நண்பர்கள் இருவரும் கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். விஷாக் முன் பயணி இருக்கையில் அமர, அவரது நண்பர்கள் பின் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

நம் தமிழகம் மட்டுமின்றி வடகிழக்கு பருவ மழை கேரளாவிலும் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரள மாநிலம் முழுவதுமே ஆரஞ்ச் நிற எச்சரிக்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாம் இந்த செய்தியில் பார்க்கும் விபத்தின்போது இடுக்கி-கொச்சி சாலைகளில் லேசாக விட்டுவிட்டு தூரல் விழுந்த வண்ணம் இருந்துள்ளது.

இதனால் இவர்கள் வைபர்களை ஆக்டிவ் செய்தவாறே காரை இயக்கியுள்ளனர். இருப்பினும் மழையின் போது காரின் முன் கண்ணாடி சற்று மங்கலாக தெரியும் அல்லவா. இருந்தாலும் தன்னால் முடிந்தவரை எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் டிரைவர் காரை ஓட்டியுள்ளார். அப்போது சாலையில் குழி இருப்பதை கண்ட டிரைவர் அதனை தவிர்க்கும் விதமாக வாகனத்தை சற்று ஓரங்கட்டியுள்ளார்.

அந்த சமயத்தில் தான் ஈரமான சாலையில் சறுக்கிய காரின் டயர்கள் ஆஃப்-ரோடை நோக்கி காரை இழுத்து சென்றுள்ளன. வழக்கமான சாலையாக இருந்திருந்தால், இவ்வாறு டயர்கள் சறுக்கினால் கார் சாலைக்கு அருகில் உள்ள சகதியில் சிக்கி நின்றிருக்கும். ஆனால் இந்த சம்பவத்தில் இவர்கள் சென்ற சாலை சற்று மேடான பகுதியில் இருந்துள்ளது.

இதனால் சாலைக்கு இரு பக்கமும் வீடுகள் பள்ளமான பகுதியில் இருந்துள்ளன. எந்த அளவிற்கு என்றால், தங்களது கார் சறுக்கியப்படி சுமார் 20இல் இருந்து 30 அடி ஆழத்தில் இருக்கும் ஆஃப்-ரோடில் செங்குத்தாக கவிழ்ந்ததாக மேலுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளனர். 20- 30 அடி என்றால், இந்த விபத்தை நினைத்து பார்க்கவே பயங்கரமாக உள்ளது.

நிச்சயமாக அவ்வளவு அடி உயரத்தில் இருந்து வாகனம் பள்ளத்தை நோக்கி சீறி பாய்கிறது என்றால், அதனுள் இருந்த பயணிகள் அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என்று தான் நினைத்திருப்பார்கள். இவர்களும் அவ்வாறே அந்த சமயத்தில் பயந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட எந்த பயணிக்கும் பெரியதாக ஆபத்து ஏற்படவில்லை என்பதுதான் இந்த சம்பவத்தை விரிவாக இந்த செய்தியில் நாம் பார்ப்பதற்கு காரணம்.

பயணித்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே முதுகெலும்பு காயங்கள் ஏற்பட்டதாகவும், அதனையும் 3 மாதங்களுக்கு பெட் ரெஸ்ட் எடுத்தால் சரி செய்துவிடலாம் என மருத்துவர் சொன்னதாகவும் விஷாக் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் வீடு ஒன்றின் வாசல் அருகே டாடா நெக்ஸான் கார் செங்குத்தாக தரையில் சொருகியப்படி நிற்பதை காணலாம்.

இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரது உயிரும் பாதுகாக்கப்பட்டிருப்பது, முழுக்க முழுக்க டாடா நெக்ஸானின் தரத்தை வெளிகாட்டுகிறது. உலகளாவிய என்சிஏபி சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை நெக்ஸான் பெற்றுள்ளது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். 17க்கு 16.06 புள்ளி பாதுகாப்பு மதிப்பெண்களை நெக்ஸான் பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் இந்த அளவிற்கு அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மாடல் நெக்ஸானே.


Click it and Unblock the Notifications








