பாலத்தில் இருந்து தலைகீழாக விழுந்தும் யாருக்கும் ஒன்னுமே ஆகல... வாயை பிளக்காதீங்க... அது டாடா கார்!
பாலத்தில் இருந்து தலைகீழாக கவிழ்ந்தபோதும், டாடா கார் ஒன்று பயணிகளின் உயிரை அசால்டாக காப்பாற்றியுள்ளது.

இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்கள் தற்போது பாதுகாப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். அத்துடன் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புது கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை மத்திய அரசும் கட்டாயமாக்கி வருகிறது.

எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டு கொண்டு பாதுகாப்பு வசதிகளை அதிகரித்து வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. பொதுவாக புதிய கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டு, அதன் பாதுகாப்பு தரம் கண்டறியப்படும்.

இந்த க்ராஷ் டெஸ்ட்களில் டாடா கார்கள் அசத்தி வருகின்றன. குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்களில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையை நமக்கு தேடி கொடுத்தது டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார்தான். இதன்பின் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரும் கூட 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றது.

இதன்மூலம் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்களில், 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற இரண்டாவது இந்திய கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் பெற்றது. தற்போதைய நிலையில், இரண்டு 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார்களை வைத்திருக்கும் ஒரே ஒரு இந்திய நிறுவனம் டாடா மட்டுமே. டாடா நிறுவனத்தின் கார்கள் விபத்துக்களில் இருந்து பயணிகளை பல முறை காப்பாற்றியுள்ளன.

குறிப்பாக குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இன் இந்தியா காரான டாடா நெக்ஸான், பயணிகளை பல முறை காயமின்றியோ அல்லது சிறு காயங்களுடனோ காப்பாற்றியுள்ளது. எனவே உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் காராக டாடா நெக்ஸான் திகழ்கிறது. இதற்கு டாடா நெக்ஸான் காரின் கட்டுமான தரம் மிக முக்கியமான காரணம்.

அத்துடன் டாடா நெக்ஸான் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த சூழலில், தற்போது 2 விபத்துக்களில் இருந்து டாடா நெக்ஸான் கார் பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த இரு விபத்துக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், முதல் விபத்து கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெற்றுள்ளது. அப்போது மூன்று பயணிகள் டாடா நெக்ஸான் காரில், மும்பை-கோவா நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தனர். அவர்கள் கல்யாண் பகுதியில் இருந்து ஸ்ரீவர்தன் பகுதி நோக்கி பயணம் செய்தனர். அப்போது அந்த கார் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனால் சுமார் 15 அடி உயர பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்தது. ஆனால் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த காரின் டிரைவர் குடிபோதையில் காரை ஓட்டவில்லை என்பது தெரியவந்தது.

அதேபோல் டாடா நெக்ஸான் வேறு எந்த வாகனத்தின் மீதும் விழவில்லை. இதேபோல் மற்றொரு விபத்தில் இருந்தும் டாடா நெக்ஸான் பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த விபத்தும் மும்பை-கோவா நெடுஞ்சாலையில்தான் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 23ம் தேதியன்று இந்த சாலை விபத்து அரங்கேறியுள்ளது.

இந்த விபத்திலும் டாடா நெக்ஸான் கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து, தலைகீழாக கவிழ்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலும் காரில் இருந்த பயணிகள் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர். எனினும் இந்த விபத்து தொடர்பாக விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் டாடா நெக்ஸான் எவ்வளவு பாதுகாப்பான கார்? என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications








