எந்த பக்கம் திரும்பினாலும் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் இருக்கு!! இந்த ஒரு நகரத்தில் மட்டும் டாடா தீயாய் வேலை செய்யுது!
டாடா பவர் (Tata Power) நிறுவனம் இந்தியாவின் ஓர் முக்கிய மாநகரத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையில் 1,000 என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இந்தியாவின் எந்த முக்கியமான மாநகரம் அது என்பதையும், டாடா பவர் நிறுவனத்தால் நிறுகப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துமாறு மத்திய அரசாங்கத்தில் இருந்து மாநில அரசாங்கம் வரையில் மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று என்னவென்றால், ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறைய இடங்களில் இல்லாதது ஆகும். இதனால், எலக்ட்ரிக் வாகனங்களை தொலைத்தூர பயணங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுடன் ஸ்டாண்டர்ட்டாக ஒரு சார்ஜர் வழங்கப்படுகிறது. அந்த சார்ஜரை வீட்டில் பயன்படுத்தக்கூடியதாக கார் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், அவற்றை கொண்டு எலக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் ஆகிறது. இதனால், பெட்ரோல் பங்குகளை போன்று, ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த நிறைய இடங்களில் தேவைப்படுகின்றன.
ஆனால், தற்போதைக்கு நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் குறைவாகவே உள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இப்போதுதான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களால் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை இந்தியாவில் நிறுவிவரும் நிறுவனங்களுள் ஒன்று டாடா பவர் ஆகும்.

டாடா குழுமத்தின் ஓர் அங்கமாக டாடா பவர் விளங்குகிறது. டாடா பவர் நிறுவனத்தால் நிறுவப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களில் டாடா எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, மற்ற கார் நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களையும் சார்ஜ் செய்ய முடிகிறது. இத்தகைய டாடா பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை மும்பை மாநகரத்தில் மட்டும் 1,000ஐ கடந்துள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்படும் நகரங்களுள் ஒன்று மும்பை ஆகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மும்பையில் மட்டும் சுமார் 10,000க்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் இயங்கி கொண்டிருக்கின்றன. இத்தகைய நகரத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதினால், டாடா பவர் நிறுவனம் தனது ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் நிறுவி வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள டாடா பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை வெற்றிக்கரமாக 1,000ஐ கடந்துள்ளது. டாடா பவரின் இந்த 1,000 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களில் பாதிக்கு மேல் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கான எலக்ட்ரிக் வாகனங்களுக்காக பயன்படுத்துகின்றன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 531 டாடா பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் ஃப்ளீட் வாகனங்களுக்காக மட்டும் மும்பையில் பயன்படுத்தப்படுகின்றன.
385 டாடா பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் மும்பையின் குறிப்பிட்ட குடியிருப்பு வளாகங்களுக்குள் நிறுவப்பட்டு இருக்கின்றன. டாடா பவரின் 58 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் மால்கள், ஒட்டல்கள், அலுவலகங்கள் போன்ற கமர்ஷியலான இடங்களில் உள்ளன. மீதி 44 டாடா பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் மட்டுமே பொது இடங்களில் உள்ளன. இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பையில் 1,000 டாடா பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு உள்ளன என்றாலும், அவற்றுள் 44 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை மட்டுமே பொது மக்கள் எவரொருவராலும் பயன்படுத்த முடிகிறது. மற்ற ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்த வேண்டுமெனில், அந்த குறிப்பிட்ட குடியிருப்பு வளாகத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது மால்கள், ஓட்டல்கள், அலுவலகங்களின் வளாகத்திற்குள் உங்களது எலக்ட்ரிக் வாகனத்தை கொண்டு செல்ல வேண்டி உள்ளது.


Click it and Unblock the Notifications









