68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்தில் ஏர் இந்தியா!! ரூ.18 ஆயிரம் கோடியில் ஏலத்தை முடித்த டாடா சன்ஸ்
'Welcome back, Air India' (மீண்டும் வரவேற்கிறோம், ஏர் இந்தியா) என ரத்தன் டாடா டுவிட்டரில் ட்விட் செய்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு இந்த டுவிட்டர் பதிவை இன்று (2021 அக்டோபர் 8) மாலையில் ரத்தன் டாடா பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு நிறுவனமான ஏர் இந்தியா சமீப ஆண்டுகளாக தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அரசு சார்ந்த சில பிரமுகர்கள் கூட இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் விமானங்களை ஆளும் பாஜக அரசாங்கத்தால் தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போனது. சில ஏர் இந்தியா விமானங்களின் பிஸ்னஸ் கிளாஸ் பகுதியில் கூட வௌவால் பறப்பது, எறும்புகள் மெய்வதாக நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் கூட செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.

அதிலும் குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டில் இருந்து அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குகள் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலைமையை இன்னும் மோசமாக்கின. கடந்த ஆண்டில் சில மாதங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டு இருந்தது ஊரறிந்த விஷயம். இதனால் ஏர் இந்தியாவின் வருவாய் அதளபாதாளத்திற்கு சென்றது.

அந்த சமயங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களை ஒன்றிய அரசாங்கம் எந்த அளவிற்கு பராமரித்தது என்பது தெரியவில்லை. ஆனால் கடந்த ஏப்ரலில் இருந்து ஏர் இந்தியாவை தனியார் நிறுவனத்திற்கு விற்பதில் மிகவும் முனைப்பு காட்ட துவங்கியது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட கடன் சிக்கல்கள் உள்ளன.

இதனாலேயே ஏர் இந்தியாவை வாங்க பல தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என செய்திகள் கூறுகின்றன. ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது விபரங்களை சமர்பிக்க அரசாங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதற்கு கடந்த செப்டம்பர் 15, இறுதிநாளாகவும் அறிவிக்கப்பட்டது.

இதில் டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்து, தனது ஏல விபரங்களை ஒன்றிய அரசாங்கத்திடம் சமர்பித்தது. டாடா குழுமம் அளித்த ஏல விபரங்களை மத்திய அரசும் ஏற்று கொண்டு தனது அறிக்கையை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது.

இந்த அறிக்கையில், 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனமான, பழமை வாய்ந்த ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்பட்டுள்ளதை மத்திய அமைச்சர்கள் குழு உறுதி செய்துள்ளதாக மத்திய அரசு செயலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு சார்பில் ஏர் இந்தியாவிற்கு அறிவித்திருந்த ரிசர்வ் தொகையான ரூ.12,906 கோடியை காட்டிலும் டாடா சன்ஸின் ஏலத்தொகை அதிகம் என்று முதலீடு, பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை டாடாவுக்கு விற்பதன் மூலம் மத்தியில் ஆளும் அரசுக்கு ரூ.2,700 கோடி கிடைக்கும் எனவும் இவர் கூறியுள்ளார்.

விற்பனை ஒப்பந்தப்படி ஏர் இந்தியாவை வாங்கி முதல் ஆண்டில் எந்த ஊழியரையும் டாடா குழுமத்தால் பணி நீக்கம் செய்ய முடியாது. இரண்டாவது ஆண்டில் இருந்து விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்தலாம் என அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனை ஒப்பந்தப்படி, ஏர் இந்தியாவை வேறு யாருக்கும்/ எந்த நிறுவனத்திற்கும் டாடா நிறுவனத்தால் கை மாற்றிவிட முடியாது.

5 ஆண்டுகளுக்கு பிறகும்கூட ஓர் இந்தியருக்கோ அல்லது இந்திய நிறுவனத்திற்கோ தான் விற்க முடியும். வருவாய் இழப்பினால் ஏர் இந்தியாவை கடந்த சில வருடங்களாக தான் தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்து வந்ததாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு இருந்தே, அதாவது 2001ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவை ஆட்சி செய்த அரசாங்கங்கள் முயற்சி செய்து வந்தன.

கடந்த சில வருடங்களாக ஏர் இந்தியாவினால் மத்திய அரசாங்கத்திக்கு ஒவ்வொரு நாளும் ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில், இதுவரை ஏர் இந்தியா மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொகை மொத்தம் சுமார் ரூ.70 ஆயிரம் கோடியாம். கேட்டாலே தலைசுற்றுகிறது. எனவே ஏர் இந்தியாவை விற்றது மத்திய அரசாங்கத்தின் பார்வையில் இலாபகரமான விஷயமே ஆகும்.


Click it and Unblock the Notifications








