மொத்தமா நசுங்கியும் சிலிண்டருக்கு ஒன்னுமே ஆகல.. உசுர காப்பாத்தும்னு தெரியும், உசுர கொடுத்து காப்பாத்தியிருக்கு
இந்தியாவில் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக முன்னணி நிறுவனங்கள் அதிக அளவில் சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ம் இந்தியாவில் சிஎன்ஜியில் இயங்கும் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் மிக முக்கியமான சிஎன்ஜி கார் மாடல்களில் ஒன்றாக டியாகோ சிஎன்ஜி (Tiago CNG) இருக்கின்றது. நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான சிஎன்ஜி காராகவும் இது காட்சியளிக்கின்றது.
ரூ. 5.99 லட்சத்திற்கே டியாகோ சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை குறைவான சிஎன்ஜி கார் மாடலே சமீபத்தில் மிக மோசமான விபத்தில் சிக்கியிருக்கின்றது. முழுமையாக உருக்குலைந்து போகும் அளவிற்கே மோசமான விபத்திலேயே டியாகோ சிஎன்ஜி சிக்கியிருக்கின்றது.

இருப்பினும், அந்த காரில் வழங்கப்பட்டிருந்த சிஎன்ஜி சிலிண்டருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த சிலிண்டருக்கு மட்டுமல்ல அக்காரை ஓட்டி வந்தவருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை வீடியோ எடுக்கும் அளவிற்கு அவர் தெளிவாக இருந்திருக்கின்றார். அந்த அளவிற்கே அதிக பாதுகாப்பை டாடா டியாகோ சிஎன்ஜி கார் அதன் பயணிகளுக்கு வழங்கி இருக்கின்றது.
பொதுவாகவே டாடாவின் தயாரிப்புகள் அதிக பாதுகாப்பிற்கு பெயர்போனவையாகக் காட்சியளிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த சம்பவம் அமைந்திருக்கின்றது. டியாகோ, ஓர் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த அதிகபட்ச ரேட்டிங்கை டியாகோ பெற்றது.
இந்த நிலையிலேயே நிஜ உலக பயன்பாட்டிலும் இந்த கார் அதிக பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்து இருக்கின்றது. இந்த காரின் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டு பக்கங்களும் மோதலைச் சந்தித்த பின்னரும் தான் ஓர் உறுதியான கார் என்பதை அது நிரூபித்திருக்கின்றது.
லாரியின் பின் பக்கத்தில் இந்த கார் மோதிய நிலையில், பின்னால் ஹூண்டாய் அவுரா காரும் மோதியிருக்கின்றது. இதன் விளைவாகவே காரின் முழு உருவமும் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கின்றது. இந்த விபத்திற்கு லாரியின் தவறான பாதை பயணமே காரணம் என கூறப்படுகின்றது. அதாவது, லாரிகளுக்கான லேனில் இல்லாமல், கார்களுக்கான லேனில் அந்த டிரக் சட்டென நுழைந்திருக்கின்றது.

இதை சற்றும் எதிர்பாராத டியாகோ சிஎன்ஜி டிரைவர் லாரின் பின் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மோதியிருக்கின்றார். இந்த நிலையிலேயே டியாகோ சிஎன்ஜி காரை ஹூண்டாய் அவுரா-வும், இந்த காரை, அதன் பின்னால் வந்த மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift)-ம் மோதியிருக்கின்றது. லாரி டிரைவர் ஒருவரின் அலட்சியத்தில் அடுத்தடுத்து என மொத்தம் மூன்று கார்கள் விபத்தில் சிக்கியிருக்கின்றன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. குறிப்பாக, அனைவரும் சிறு சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றார். இதில் டியாகோ சிஎன்ஜி-யே பலரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. முக்கியமாக கார் முழுமையாக உருக்குலைந்த பின்னரும் சிஎன்ஜி சிலிண்டருக்கு சிறு கீரலும்கூட ஏற்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்வின் வாயிலாக, எவ்வளவு பெரிய விபத்தாக இருந்தாலும் டாடா டியாகோ சிஎன்ஜி கார் ஆபத்தான சூழலை ஏற்படுத்தாது என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் விலையானது மற்றும் அதிக பாதுகாப்பானது மட்டுமல்ல அதிகம் மைலேஜையும் இந்த கார் வழங்கும். ஒரு கிலோவிற்கு 26.49 கிமீ முதல் 28.06 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








