எவ்வளவு கனவு கண்டிருப்பார்!! டெலிவிரி எடுப்பதற்குள் அப்பளம் போல் நொறுங்கிய டாடா டியாகோ!!
டெலிவிரி எடுக்கும்போது ஏற்பட்ட தவறுதலினால் டாடா டியாகோ கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூம் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மே மாதத்தில் பரவிய கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு டீலர்ஷிப் மையங்கள் மீண்டும் விறுவிறுப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளன. இதனால் கடந்த ஜூன் மாதத்திலேயே வாகன விற்பனை அனைத்து பிரிவுகளிலும் கணிசமாக முன்னேறி இருப்பதை பார்க்க முடிந்தது.

மக்கள் வைரஸ் பரவலின் அச்சத்தால் சொந்த வாகனத்தில் பயணிக்கவே விருப்பப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக கார் ஒன்றை வாங்குவது பெரும்பான்மையானவர்களுக்கு சிறு வயதில் இருந்தே கனவாக இருக்கும்.

அவ்வாறு சிறு வயதில் இருந்து கனவு கண்டு ஒரு காரை வாங்கும்போது அந்த கார் சாலையில் ஓட்டி பார்ப்பதற்குள்ளாகவே விபத்தில் சிக்கினால்? விபத்திற்கு காரணமே உரிமையாளரான தான் தான் என்றால்? கேட்பதற்கே பரிதாபமாக உள்ளது அல்லவா.

ஆனால் இங்கு ஒருவருக்கு அது நிஜமாகவே நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் டெலிவிரிக்கு தயாராக இருந்த டாடா டியாகோ காரை அதன் உரிமையாளர் டெலிவிரி எடுக்க சென்றுள்ளார். டீலர்ஷிப் மையத்தின் முதல் மாடியில் இருந்த காரினை தவறுதலாக முன்னோக்கி நகர்த்தியன் விளைவாக கார், முதல் மாடியில் இருந்து விழுந்துள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி விபத்திற்குள்ளாகியுள்ள இந்த டியாகோ ஹேட்ச்பேக் காரினை அதன் உரிமையாளர் தான் சம்பவத்தின் போது இயக்கினார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள டாடா மோட்டார்ஸின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் மையம், செலக்ட் கார்ஸ். ஹைதராபாத்தில் உள்ள பெரிய அளவிலான டீலர்ஷிப் மையங்களில் ஒன்றான இதில் கீழ் தளத்திலும், மேல் தளத்திலும் கார்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

மேல் மாடியில் இருந்து டெலிவிரி எடுக்கப்படும் கார்கள் ஹைட்ராலிக் ராம்ப் மெஷின் மூலமாக கீழ் தளத்திற்கு கொண்டுவரப்படும். இந்த டியாகோ காரினை கீழ் கொண்டுவருவதற்கும் ஹைட்ராலிக் மெஷின் தயாராக உள்ளது. ஆனால் அதற்குள்ளாக இந்த அசம்பாவிதம் நடந்து முடிந்துள்ளது.

ஷோரூமில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோவில் கார் முன்னோக்கி தவறுதலாக நகர்த்தும்போது பலர் அதன் அருகில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாராலும் காரை நிறுத்த முடியவில்லை. இந்த குறிப்பிட்ட டியாகோ கார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டதாக இருக்க வேண்டும்.

ஏனெனில் மேனுவல் காரை பயன்படுத்தி வந்தவர்களுக்கு முதன்முதலாக ஆட்டோமேட்டிக் காரை பயன்படுத்தும்போது ஏற்படும் குழப்பமே இவ்வாறான விபத்துகளுக்கு காரணம் என்கின்றனர் ஆர்வலர்கள். இந்த விபத்தில் காரின் உரிமையாளர் மற்றும் கீழே நின்றிருந்த ஒருவர் என இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








