சின்னாபின்னமானாலும் பயணிகளை காவந்து செய்த டாடா டியாகோ கார்!
ஓவர்டேக் செய்யும்போது டாடா டியாகா கார் டிரக்குடன் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஓவர்டேக் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை. இது எந்தளவு விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு டாடா டியாகோ காரின் இந்த விபத்து சம்பவம் சிறந்த உதாரணமாக மாறி இருக்கிறது.

நெடுஞ்சாலையில் டிரக் ஒன்றை முந்த முயன்ற டாடா டியாகோ கார் கோர விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த கோர விபத்து குறித்த படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

சென்னை பதிவு எண் கொண்ட டாடா டியாகோ கார்தான் விபத்தில் சிக்கி இருக்கிறது. மேலும், டாடா டியாகோ காரின் மிக மோசமான விபத்தாகவும் படங்களின் மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

டிரக் ஒன்றை முந்த முயன்றபோது, இந்த டாடா டியாகோ கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருக்கிறது. டிரக்குடன் மோதியதில் இந்த கார் சாலை ஓரத்தில் பல்டி அடித்து கவிழ்திருக்கிறது. மேலும், அந்த டிரக்கும் இந்த விபத்தில் நிலைகுலைந்து கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் டாடா டியாகோ கார் பலத்த சேதமடைந்துள்ளது. கூரை தனியாக கழன்று விட்டது. அதேநேரத்தில், இந்த விபத்தில் ஒரே ஆறுதல் என்னவெனில், கார் விபத்துக்குள்ளான நேரத்தில், ஏர்பேக் சரியான சமயத்தில் விரிந்து பயணிகளை காப்பாற்றி இருக்கிறது.

ம், கார் மிக மோசமாக சேதமடைந்திருந்தாலும், காரில் பயணித்தவர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த விபத்து மூலமாக ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதி எந்தளவு அவசியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தற்போது பல கார் மாடல்களில் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை அடிப்படை பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்படுகிறது.

இருப்பினும், புதிதாக கார் வாங்குபவர்கள் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய மாடலை மட்டுமே தேர்வு செய்யவும். இது நிச்சயம் விபத்து சமயங்களில் உயிர் காக்க உதவும் என்பதை மனதில் வையுங்கள்.

கார் வாங்கிய பிறகு நன்கு பழகிய பின்னரே நெடுஞ்சாலையில் செல்லுங்கள். காரின் கையாளுமை, கட்டுப்படுத்தும் திறன் போன்றவை கைகூடி வந்த பின்னரே நீங்கள் நெடுஞ்சாலை பக்கம் செல்வது நல்லது.

மேலும், ஓவர்டேக் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை. முன்னால் செல்லும் வாகனத்தின் ஓட்டுனருக்கு எச்சரிக்கை செய்வது மிக அவசியம். அதேபோன்று, தடம் மாறும்போது பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்த பின் தடம் மாறவும்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சோர்வு ஏற்பட்டால், காரை ஓரம் கட்டி விட்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயணத்தை தொடரவும். இவை உங்களது பயணத்தை பாதுகாப்பாகவும், சிறக்கவும் வைக்கும்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








