கோர விபத்தில் சிக்கிய டாடா காரை மீண்டும் வாங்கிய உரிமையாளர்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த, மிகவும் விலை குறைவான கார் ஆகும். தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5.54 லட்ச ரூபாய் மட்டுமே.
இவ்வளவு விலை குறைவான காராக இருந்தாலும், டாடா டியாகோ மிகவும் பாதுகாப்பானது. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா டியாகோ கார், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) வாங்கி அசத்தியுள்ளது. எனவே சாலை விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளின் உயிரை இந்த கார் காப்பாற்றியுள்ளது.

சமூக வலை தளங்களில் டாடா டியாகோ காரின் உரிமையாளர்கள் பலர் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த குழுக்களில் எல்லாம் டாடா டியாகோ காரின் பெருமைகளை உங்களால் படிக்க முடியும். இந்த வகையில் சத்ய பிரகாஷ் என்பவர், டாடா டியாகோ காருடன் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா டியாகோ காரை வாங்கினார். ஒரு நாள் அவரும், அவரது நண்பர்கள் 2 பேரும், இந்த டாடா டியாகோ காரில், அகமதாபாத் நகரில் இருந்து ஐதராபாத் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு பள்ளத்தை சத்ய பிரகாஷ் பார்க்கவில்லை.

எனவே உடனடியாக ஸ்டியரிங் வீலை அவர் திருப்பியுள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை பல முறை உருண்டுள்ளது. இந்த விபத்தில் கார் பயங்கரமாக சேதமடைந்து விட்டது. இந்த விபத்து நடந்த உடனேயே சத்ய பிரகாஷ் மயக்கமடைந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் வந்து அவரையும், அவரது நண்பர்களையும் மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. டாடா டியாகோ காரின் சிறப்பான கட்டுமான தரம்தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. வேறு ஒரு நிறுவனத்தின் காரில் பயணம் செய்திருந்தால், உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பது சத்ய பிரகாஷின் கருத்து.
ஒரு வகையில் இந்த விபத்திற்கு சத்ய பிரகாசும் ஒரு காரணம். அதையே அவரே ஒப்பு கொள்கிறார். இந்த விபத்து நிகழ்ந்தபோது, அவரது கவனம் சாலையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விபத்து நிகழ்ந்தபோது, கார் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது. இதனால்தான் விபத்தில் கார் பயங்கரமாக சேதமடைந்தது.
இருப்பினும் உள்ளே இருந்தவர்கள் அனைவரையும் பெரிய அளவில் காயமின்றி டாடா டியாகோ கார் காப்பாற்றி விட்டது. இதன் காரணமாக இந்த விபத்து நடைபெற்ற ஒரு சில வாரங்களுக்கு பிறகு, மீண்டும் ஒரு டாடா டியாகோ காரை சத்ய பிரகாஷ் வாங்கியுள்ளார். டாடா டியாகோ கார் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
டாடா டியாகோ கார் தற்போது பெட்ரோல் (Petrol), சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) ஆகிய வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலவிதமான வெர்ஷன்களில் விற்பனைக்கு கிடைப்பதும், டாடா டியாகோ காரை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
டியாகோ மட்டுமல்லாது, டாடா நிறுவனத்தின் மற்ற கார்களான டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்களும் மிகவும் பாதுகாப்பானவைதான். எனவே பாதுகாப்பான காரை வாங்க வேண்டும் என விரும்புபவர்கள், டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








