150 கிமீ வேகத்துல தலகீழா கவிழ்ந்தும் ஒன்னும் ஆகல! நல்ல வேள அந்த கம்பெனி கார்ல போனாங்க! இல்லனா அவ்ளோதான்!
ஒவ்வொரு சாலையிலும் என்ன வேகத்தில் பயணம் செய்யலாம் என்ற வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஆனால் வேக வரம்புகளை (Speed Limits) மீறுவதை, நிறைய பேர் பெருமையாக கருதுகின்றனர். வேகமாக சென்று, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதும், நிறைய பேரின் எண்ணமாக உள்ளது.
இவை எல்லாம் பயங்கரமான சாலை விபத்துக்களுக்கு வழி வகுத்து விடுகின்றன. அதிவேகம் காரணமாக கடந்த காலங்களில் ஏராளமான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்றுள்ளன. எனவே பொதுமக்களுக்கு இது தொடர்பாக ஏற்கனவே போதுமான அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது. ஆனால் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஒரு சிலர் மாறுவதாக இல்லை.

இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, மிக வேகமாக பரவி வருகிறது. டார்க் இந்தியாவின் எக்ஸ் தளத்தில் (முன்பு ட்விட்டர்) வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், டாடா டிகோர் (Tata Tigor) கார் ஒன்று, மணிக்கு 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
வீடியோவில் காரின் ஸ்பீடோமீட்டரை கவனித்தால், கார் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணித்ததை நீங்கள் உணரலாம். இது போன்ற அதிக வேகத்தில் பயணம் செய்வதே முதலில் தவறானது. ஆனால் இந்த காரின் டிரைவரோ, இவ்வளவு அதிகமான வேகத்தில், அலட்சியமாக மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதன் காரணமாக டாடா டிகோர் கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. பொதுவாக கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தால், ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்துவது எளிமையான ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது, ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
ஒரு சிறிய தவறு கூட, மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். நாம் தற்போது காணும் வீடியோவிலும் அதுதான் நடந்துள்ளது. அதிக வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால், டாடா டிகோர் கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. ஆனால் நல்ல வேளையாக, டாடா டிகோர் காருக்குள் இருந்த யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் அனைவரும் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விபத்து எங்கு நடைபெற்றது? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சாலையில் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக வேகத்தில் வாகனங்களை இயக்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதை பாதுகாப்பான இடங்களில் செய்ய வேண்டும். அதாவது ரேஸ் டிராக் போன்ற பகுதிகளுக்கு சென்று, அதிவேகத்தில் வாகனங்களை இயக்கலாம். அதுவும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை எல்லாம் அணிந்து கொண்டு.
அதை விடுத்து விட்டு, பொது சாலைகளில் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காரை இயக்குவது என்பது மிகவும் ஆபத்தானது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்களின் வாழ்க்கையை மட்டும் பணயம் வைக்கவில்லை. கூடவே சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் அவர்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே இத்தகை நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். டாடா டிகோர் கார் மிகவும் பாதுகாப்பானது என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அதிவேகத்தில் தலைகீழாக கவிழ்ந்தும் கூட, பயணிகளை சிறு காயங்களுடன் காப்பாற்றியுள்ளது. இது குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








