டெக்னாலஜியில் வளர்ந்துவரும் நம் பாரத நாட்டில் இப்படியொரு நிலைமையா!! பெரிய இரயில் விபத்து தடுக்கப்பட்டு இருக்கு
உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் பழுதடைந்து பாதியில் நின்ற என்ஜின் இரயில் பெட்டியை இரயில்வே பணியாளர்கள் தங்களது கைகளால் தள்ளிக் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வளவு பெரிய பாரத நாட்டில் இப்படியொரு நிலைமையா என கேட்க தோன்றும் விதமாக அமைந்துள்ள இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி என்கிற பகுதியில் கடந்த மார்ச் 21ஆம் தேதி, வியாழக்கிழமை இரயிலின் என்ஜின் பெட்டி தொழிற்நுட்ப கோளாறு காரணமாக நடு வழியில் செயல்படாமல் நின்றது. மற்ற இரயில்கள் செல்லும் முக்கியமான லைனில் இரயில் நின்றதால், இரயில் பெட்டிக்குள் இருந்த அதிகாரிகளும், இரயில்வே பணியாளர்களும் பதற்றமடைய ஆரம்பித்தனர்.

எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் இரயில் என்ஜின் பெட்டி அங்கிருந்து நகராததால் வேறு வழியின்றி கைகளால் தள்ளி, தண்டவாளத்தின் வேறொரு லைனில் கொண்டு சென்று நிறுத்த திட்டமிட்டனர். ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால், கார், பேருந்தை இல்லாமல், வெறும் என்ஜின் பெட்டியாக இருப்பினும் அது பல டன்களில் எடை கொண்டதாக இருக்கும். ஆதலால், இரயில் பெட்டியை தள்ள நிறைய பேர் தேவைப்படும்.
இதனால், இந்த என்ஜின் பெட்டிக்குள் இருந்த அதிகாரிகள் உதவிக்கு கூடுதலாக பணியாளர்களை அழைத்தனர். உதவிக்கு ஆட்கள் வந்த பின், இரயில் என்ஜின் பெட்டி மெல்ல மெல்ல நகர்த்தி கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் நிஹால்கர் என்கிற இரயில் நிலையத்திற்கு அருகே நடைபெற்றது. இந்த இரயில் நிலையத்திற்கு அருகே இரயில்வே கேட்டை கடந்து இந்த என்ஜின் பெட்டியை தள்ளிக் கொண்டு சென்ற போது அங்கிருந்த வாகன ஓட்டிகள் இந்த சம்பவத்தை தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
தள்ளிக் கொண்டு செல்லப்பட்ட இரயில் என்ஜின் பெட்டிக்காக இரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், இரயில்வே கேட்டிற்கு இரு பக்கத்திலும் வாகன ஓட்டிகள் நிறைய பேர் காத்திருந்ததை வீடியோவில் காணலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் சுல்தான்புரில் இருந்து லக்னோவிற்கு இந்த என்ஜின் இரயில் பெட்டியை கொண்டு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஆர்.எஸ் சர்மா, "இரயில்வே அதிகாரிகளால் ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் டிபிசி இரயில் கடந்த வியாழக்கிழமை நிஹால்கர் ரயில் நிலையத்துக்கு வெளியே பழுதடைந்ததை தொடர்ந்து இரயில்வே ஊழியர்கள் அதை நிலையத்துக்கு தள்ளி சென்று நிறுத்தினர். அதன்பிறகு அந்த பிரச்சனை சரிச்செய்யப்பட்டு, ரயில் அதன் இலக்கை நோக்கி சென்றது" என்றார்.

இதே போன்றதான ஒரு சம்பவம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மும்பையில் நடந்தது. நவி மும்பையில் உள்ள வாஷி இரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் இரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பயணி ஒருவரை காப்பாற்றுவதற்காக லோக்கல் எலக்ட்ரிக் இரயிலை இரயில்வே பணியாளர்கள் தங்கள் கைகளால் தள்ளினர். அந்த சம்பவத்தின்போது, அந்த லோக்கல் இரயிலில் பழுது எதுவும் ஏற்படவில்லை. சிக்கிக் கொண்ட பயணியின் பாதுகாப்பிற்காக அவ்வாறு செய்தனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரயிலை ஸ்டார்ட் செய்து இயக்கினால் சிக்கிக் கொண்ட பயணிக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால், கைகளால் தள்ளியதில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அத்தகைய சமயங்களில் கைகளால் இரயிலை தள்ளுவதே சிறந்தது. ஆனால், தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்து சம்பவத்தில் அவ்வாறான தேவை எதுவும் இல்லை. உடனடியாக வேறொரு என்ஜின் இரயிலை அழைத்து பழுதடைந்த என்ஜின் இரயில் பெட்டியை கொண்டு சென்றிருக்கலாம்.
ஆதலால், இந்த விஷயத்தில் நிஹால்கர் இரயில் நிலையத்தில் உதவிக்கு வேறொரு என்ஜின் பெட்டியை அழைக்கும் அளவிற்கு வசதி இல்லை என்பதையே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








